தமிழக மீனவர்கள் தொடர் கொலை எதிரொலி-கொழும்பு செல்கிறார் நிரூபமா

மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவின் உத்தரவில் பேரில் நிரூபமா கொழும்பு செல்லவுள்ளார்.
அதேசமயம், தவறு செய்திருப்பதாக குற்றம் சாட்டப்படுவது இலங்கை. எனவே அந்த நாட்டுக்கு நாம் போய் ஏன் சுடாதீர்கள் என்று கெஞ்ச வேண்டும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடும் கோபம் மற்றும் கொந்தளிப்பில் உள்ள மீனவ சமுதாய மக்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக திரும்பி விடுவார்களோ என்ற பயத்தில்தான் மத்திய அரசு தற்போது மீனவர் பிரச்சினையில் அக்கறை காட்டுவதாக கூறப்படுகிறது.
நிரூபமா ராவ் நாளை கொழும்பு செல்கிறார். அங்கு தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து இலங்கைத் தரப்புடன் விவாதிக்கவுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மீனவர்களை இதுவரை இலங்கைக் கடற்படை கொன்று குவித்துள்ளது.இவர்களில் ஒருவருக்குக் கூட இதுவரை மத்திய அரசு எந்த வகையான நிவாரணமோ, ஆறுதலோ கொடுத்ததில்லை. மாறாக அறிக்கை விடுவதோடு நின்று கொள்ளும்.
ஆனால் சமீபத்தில் அடுத்தடுத்து ஜெகதாப்பட்டினத்தைச்சேர்ந்த வீரபாண்டியன், புஷ்பவனத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் ஆகிய மீனவர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட செயல் தமிழக மீனவர் சமுதாயத்தை கடும் கொதிப்புக்குள்ளாக்கியுள்ளது.
மேலும், இதுகுறித்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, பிரதமர் மன்மோகன் சிங்கை நேரில் சந்தித்து முறையிட்டபோது, நமது மீனவர்களும் எல்லை தாண்டி போகிறார்களே என்று கேட்டது மீனவர்களிடையே அதிருப்தி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்டவர்கள் குறித்து பிரதமர் அனுதாபம் தெரிவிக்காமல், எல்லை தாண்டிப் போவதால்தானே கொல்கிறார்கள் என்ற ரீதியில் பேசியது அவர்களை வருத்தமுறச் செய்துள்ளது.
இந்தத் தாக்குதல்களை எதிர்த்து நாகை மாவட்ட மீனவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் குதித்துள்ளனர். மேலும் இந்தத் தாக்குதல்கள் தொடராது என்று மத்திய அரசும், தமிழக அரசும் உறுதி அளிக்காவிட்டால் சட்டசபைத் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் மீனவர் சங்கங்கள் அறிவித்துள்ளன.
சமீபத்தில் ஜெயக்குமார் குடும்பத்தினரை நேரில் சந்தித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவும் ஆறுதல் கூறி விட்டு, நிதியுதவியும் அளித்து திரும்பியுள்ளார்.
இந்தப் பின்னணியில்தான் நிரூபமா ராவை கொழும்புக்கு அவசரம் அவசரமாக அனுப்பி வைக்கிறது மத்திய அரசு.
மீனவர்களை நாங்கள் கொல்லவில்லை என்று இலங்கை வழக்கம் போல மறுத்துள்ளது. இந்த நிலையில் நிரூபமாவின் பயணம் எந்த அளவுக்கு உதவப் போகிறது என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications