ஊழல்வாதிகளுக்கு உடனே தண்டனை! - ராகுல் காந்தியின் யோசனை

மராட்டிய மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்து வரும் ராகுல் அவுரங்காபாத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் அளித்த பதில்களின் தொகுப்பு:
ஊழல் இப்போது நாட்டின் மிக முக்கிய பிரச்சினையாக உள்ளது. இதை நீடிக்க விடக்கூடாது. ஊழல் மூலம் ஏழை மக்களின் பணம் லட்சக்கணக்கான கோடிகள் கொள்ளையடிக்கப்படுகிறது. சாதாரண மக்கள் பெரும் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
எனவே ஊழலை ஒழிக்க பல்வேறு வகையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊழலை ஒழிக்க விசாரணை முறைகளும் கடுமையாக இருக்க வேண்டும். விசாரணையை வேகமாக நடத்தி முடித்து 6 மாதத்திலேயே அவர்களுக்கு தண்டனை வழங்கி விட வேண்டும்.
வழக்கு விசாரணையை 20 ஆண்டுகள் வரை இழுத்தடிக்கக் கூடாது. ஊழலை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது காங்கிரஸ் கட்சி.
எங்கே ஜனநாயகம்....
இந்திய அரசியல் கட்சிகளில் ஜனநாயகம் இல்லை. கட்சிகளில் ஜனநாயகம் இருந்தால்தான் அது நாட்டுக்கு நல்லதை தர முடியும். எங்களை பொறுத்த வரை கட்சியில் இளைஞர் காங்கிரஸ் தேர்தலை உண்மையாக நடத்தி வருகிறோம். இளைஞர்கள் அரசியலுக்கு வர ஆர்வம் காட்ட வேண்டும்.
இதை அவர்கள் தங்களுடைய கடமையாகக் கருத வேண்டும். இளைஞர்கள் அதிக அளவில் அரசியலுக்கு வரும் வகையில் அரசியல் அடிப்படைகளே மாற வேண்டும்.
உங்கள் வாழ்க்கையில் 10 வருடத்தை அரசியலுக்காக ஒதுங்குகள். இதன் மூலம் நிச்சயம் பெரும் மாற்றத்தை உருவாக்க முடியும். தற்போது கெட்டு கிடக்கும் இந்த அரசியல் அடிப்படைகளை நம்மால் மாற்ற முடியும். என்னுடைய முழு கவனமும் அதில்தான் இருக்கிறது. அரசியல் என்பது எல்லோரும் எளிதாக பங்கு பெறும் வகையில் திறந்த கதவாக இருக்க வேண்டும்.
அரசியல் என்றாலே ஊழல்தான் என்று பொதுமக்கள் நினைக்கிறார்கள். அரசியல் நடைமுறைகள் இப்போது இருப்பது போல தொடர்ந்தால் மக்களிடம் இந்த எண்ணம் தான் மேலோங்கும். எனவே அரசியல் அடிப்படைகளையே மாற்றி அமைத்தால் தான் இதைத் தடுக்க முடியும்.
நானா பிரதமர் வேட்பாளர்...?
அடுத்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் நான்தான் என்று சொல்வது வெறும் அனுமானம். நான் அப்படி கருதவில்லை. ஆனால் அரசியல் அமைப்பைப் பழுது பார்க்க வேண்டும் என்பதையே நான் ஒரே குறிக்கோளாக கொண்டுள்ளேன்.
கறுப்புப் பணம் திருப்பப்பட வேண்டும்...
வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கும் இந்தியர்களின் கறுப்பு பணத்தை கண்டு பிடித்து திரும்ப கொண்டு வர இன்னும் அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இது இந்தியாவின் பணம், இந்திய மக்களின் பணம். அதை விடக்கூடாது. இந்த பணம் திரும்ப வரும் என்ற உத்தரவாதம் வேண்டும்.
அடிமட்ட அளவில் என்ன நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ளவே கிராமங்களில் நான் அடிக்கடி சுற்றுப்பயணம் செல்கிறேன். ஏழை மக்களை சந்தித்து பேசுகிறேன்...", என்றார்.












Click it and Unblock the Notifications