ஐ.நா. சபையில் இலங்கைத் தமிழர் பிரச்சினையை எழுப்புவோம்-கத்காரி உறுதி

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன், ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் தாமரை யாத்திரையை நடத்தினார். இதன் நிறைவு விழா நேற்று சென்னை மீனம்பாக்கம் அருகே ராணுவ மைதானத்தில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பாஜகவினர் கலந்து கொண்டனர். பாஜக தலைவர் நிதின் கத்காரிகலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அவர் பேசுகையில்,
தமிழகத்தில் பாரதீய ஜனதா கட்சி நல்ல வளர்ச்சி பெற்று வருவதற்கு இந்த போராட்டம் ஒன்றே சான்றாக உள்ளது. மத்தியில் உள்ள காங்கிரஸ் கூட்டணி அரசும், மாநிலத்தில் உள்ள தி.மு.க. அரசும் சிறுபான்மை மக்களின் ஓட்டுகளுக்காக இந்து மாணவர்களுக்கு நிதி உதவி தொகையை வழங்க மறுக்கின்றன. உதவி தொகையை பெறும் வரை போராட்டம் தொடரும்.
ஸ்பெக்ட்ரம் பிரச்சினையை பாரதீய ஜனதா கட்சி உருவாக்கவில்லை. இந்திய தலைமை தணிக்கையாளர் அளித்த அறிக்கையில்தான், 2-ஜி அலைவரிசை ஒதுக்கீட்டில் ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் கோடி ஊழல் நடந்து உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள தமிழர்கள் தாக்கப்பட்டதற்காக தமிழகம் மட்டும் வருந்தவில்லை. இதை தமிழகம் மட்டும் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக பார்க்கக் கூடாது. இந்தியாவின் தேசிய பிரச்சினையாக இதைப் பார்க்க வேண்டும்.
இலங்கை தமிழர்களின் வாழ்வுக்காக பாரதீய ஜனதா கட்சி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பும். அங்குள்ள தமிழர்களுக்காக ஐ.நா. அவையில் புகார் செய்யப்படும். இலங்கை தமிழர்கள் நலனுக்காக பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் மருத்துவம் உள்பட அடிப்படை வசதிக்காக ரூ.10 லட்சம் நிதி உதவி வழங்கப்படும்.
தமிழர்கள் முழு உரிமைகளோடு இலங்கையில் வாழ்வதற்கு இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழர்கள் மரியாதையோடும், உரிமைகளோடும், கெளரவத்தோடும் வாழ்வதற்குரிய நடவடிக்கைளை செய்ய வேண்டிய கடமை இலங்கை அரசுக்கு உள்ளது.
ராகுல் வேண்டாம்-கலாமை பின்பற்றுங்கள்
இந்தியாவில் உள்ள நதிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்று அப்துல்கலாம் கூறினார். ஆனால் ராகுல்காந்தி நதிகளை இணைக்க கூடாது என்கிறார். மக்களின் நலன் பற்றி தெரியாத ராகுல் வழியை பின்பற்றாமல் அப்துல் கலாம் கூறிய வழியை பின்பற்ற வேண்டும். தமிழகத்திலும் கோடை காலத்தில் தண்ணீர், மின்சாரம் பாதிக்கப்படுகின்றன.
சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வர மத்திய அரசு தயக்கம் காட்டுவது ஏன்? விரைவில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்து சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை கொண்டு வந்து இந்தியாவில் உள்ள நதிகளை இணைக்க செலவிடுவோம்.
ப.சிதம்பரம் காங். தலைவராக முடியுமா?
குடும்ப வாரிசு பற்றி ராகுல் காந்தி பேசுகின்றார். இவரே வாரிசு முறையில் தான் அரசியலுக்கு வந்து உள்ளார். சுவரில் போஸ்டர் ஒட்டிய நான் அகில இந்திய தலைவர். ஆனால் காங்கிரசில் பிரணாப் முகர்ஜி, மன்மோகன்சிங், சிதம்பரம் யாராவது தலைவராக வரமுடியுமா? நேரு, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி, சோனியாகாந்தி, ராகுல்காந்தி என்று காந்தி தான் வரமுடியும்.
இந்தியாவில் உணவின்றி மக்கள் அல்லல்படுகின்றனர். ஆனால் ஆண்டு தோறும் ரூ.58 ஆயிரம் கோடி உணவு தானியங்கள் வீணாவதாக மத்திய அமைச்சர் கூறுகிறார். இந்த நிலை மாற வேண்டும்.
இந்தியாவின் பொருளாதாரம் மோசமாக உள்ளது. இதனால் விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய அரசு தயாராக இல்லை. இந்த நிலையை மாற்ற பாரதீய ஜனதா கட்சிக்கு மக்கள் ஆதரவு நல்கிட வேண்டும் என்றார் கத்காரி.












Click it and Unblock the Notifications