முதல்வர்கள் மாநாடு, சோனியா சந்திப்பு-டெல்லி சென்றார் கருணாநிதி
சென்னை : முதல்வர் கருணாநிதி இன்று டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
பிப்ரவரி 1ம் தேதி டெல்லியில் நடைபெறும் உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக அவர் செல்வதாக கூறப்பட்டாலும் தமிழக தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்து சோனியா காந்தியுடன் பேசுவதற்காக முக்கியமாக இந்த டெல்லி பயணத்தை முதல்வர் மேற்கொள்கிறார்.
டெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. வழக்கமாக இதுபோன்ற மாநாடுகளுக்கு மு க ஸ்டாலின் செல்வது வழக்கம். ஆனால் இந்த முறை சட்டசபைத் தேர்தல் வருவதால், தேர்தல் தொகுதி உடன்பாடு குறித்து பேச வேண்டியிருப்பதால், தானே டெல்லிக்குச் சென்றுள்ளார் முதல்வர்.
இன்று பிற்பகல் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து டெல்லி கிளம்பிச் சென்றார் கருணாநிதி. முதல்வருடன் அமைச்சர்கள், அதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
தனது டெல்லி பயணத்தின்போது பிரதமர் மன்மோகன்சிங்கையும், சோனியா காந்தியையும் அவர் சந்திக்கவுள்ளார். பிரதமரை சந்திக்கும்போது தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல் விவகாரம் குறித்துப் பேசுவார். அதேபோல சோனியாவை சந்தித்து, தொகுதி உடன்பாடு குறித்துப் பேசவுள்ளார்.
காங்கிரஸ் கட்சிக்கு 50 இடங்கள் வரை தர திமுக தயாராக உள்ளது. இதை சோனியா காந்தியுடனான சந்திப்பின்போது உறுதி செய்யவுள்ளார் கருணாநிதி. இந்த பயணத்தின்போதே காங்கிரஸுக்கு எத்தனை தொகுதிகள், எந்தெந்த தொகுதிகள் என்பதையும் திமுக தெரிவிக்கவுள்ளது என்கிறார்கள்.
தனது டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு செவ்வாய்க்கிழமை சென்னை திரும்புகிறார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications