மீண்டும் வருவார் பிரபாகரன்-பெரும் போர் வெடிக்கும்-வைகோ
சென்னை: மீண்டும் வருவார் பிரபாகரன். இலங்கையில், மீண்டும் பெரும் போர் வெடிக்கும் என்று கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
முத்துக்குமார் நினைவு தினத்தையொட்டி நேற்று இரவு சென்னையில் அஞ்சலி பொதுக் கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு வைகோ பேசுகையில்,
இலங்கை தமிழர்களுக்காக உயிர் ஆயுதம் ஏந்தி தியாகச் செம்மலாக மாறிய தம்பி முத்துக்குமாரின் மரணம், தமிழ்நாட்டில் இளைஞர்களை தட்டி எழுப்பியுள்ளது. இலங்கை அரசுக்கு ஆயுதம் வழங்கி தமிழர்களை வீழ்த்த துணை போன மத்திய அரசின் துரோகத்தை மறக்க முடியாது.
இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. அங்கு உள்ள தமிழ் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. தமிழர்கள் வசித்த பகுதிகளில் சிங்களர்கள் குடிய மர்த்தப்பட்டு வருகிறார்கள். 300 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களில் 50 பேருக்கு மட்டுமே சாப்பாடு வழங்கப்படுகிறது.
இலங்கையில் தமிழர் வசிக்கும் பகுதிகளுக்கு சென்ற வழக்கறிஞர் கயல்விழி, பிரபாகரனின் தாயை சந்தித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து வந்திருக்கிறேன் என்று கூறியதும் அந்த தாய் கண்கலங்கி உள்ளார்.
ஈழத்தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை. பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். தகுந்த நேரத்தில் அவர் மக்கள் மத்தியில் தோன்றுவார். இலங்கையில் மீண்டும் போர் வெடிக்கும். நம் கண் முன்னே தமிழ் ஈழம் மலரும் என்றார் வைகோ.












Click it and Unblock the Notifications