எகிப்தில் பரவி வரும் வன்முறை-பிரமிடுகளுக்குச் செல்ல ராணுவம் தடை

எகிப்தில் அதிபர் முபாரக்குக்கு எதிராக கலவரம் வெடித்துள்ளது. ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு முபாரக் பதவி விலகக் கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். தலைநகர் கெய்ரோவிலும் போராட்டம் வெடித்துக் கிளம்பியுள்ளது. நாட்டின் அனைத்து முக்கிய நகரங்களிலும் போராட்டங்கள், வன்முறைகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் உலகப் புகழ் பெற்ற, உலக அதிசயங்களில் ஒன்றான பிரமிடுகள் உள்ள ஜிஸா பகுதிக்குச் செல்ல ராணுவம் தடை விதித்துள்ளது. இங்கு சுற்றுலாப் பயணிகள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரமிடுகள் உள்ள பகுதியைச் சுற்றிலும் ராணுவ டாங்குகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. வீரர்களும் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை
இதற்கிடையே, கடந்த நான்கு நாட்களாக வன்முறையில் சிக்கித் தவித்து வரும் எகிப்துக்கு தேவையில்லாமல் போவதைத் தவிர்க்குமாறு மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை விடுத்துள்ள எச்சரிக்கைச் செய்தியில், எகிப்தில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்புடன் இருக்கின்றனர். அவர்களுடன் கெய்ரோவில் உள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. எகிப்தில் 3600 இந்தியர்கள் உள்ளனர். இவர்களில் 2200 பேர் கெய்ரோவில் வசிக்கின்றனர்.
எகிப்தில் தற்போது கொந்தளிப்பான நிலை காணப்படுவதால், அவசியம் இருந்தால் மட்டும் அங்கு செல்ல வேண்டும். தேவையில்லாமல் செல்வதை இந்தியர்கள் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளது.
இந்தியர்கள் குறித்த தகவல் அறிவதற்காக 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்றை கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் ஏற்படுத்தியுள்ளது. மேலும் எகிப்திலிருந்து தாயகம் திரும்ப நினைக்கும் இந்தியர்கள் வசதிக்காக விமான ஏற்பாடுகளையும் இந்திய தூதரகம் செய்துள்ளது. இந்த ஏற்பாடுகளை இந்தியத் தூதர் ஆர்.சுவாமிநாதன் செய்து வருகிறார்.
படை பலத்தை பிரயோகிக்க வேண்டாம்-ஒபாமா
இதற்கிடையே, போராட்டக்காரர்களை ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கோரிக்கை விடுத்துள்ளார்.
முபாரக்குடன், ஒபாமா அரை மணி நேரம் தொலைபேசி மூலம் பேசி ஆலோசனை நடத்தினார். முபாரக், தனது அமைச்சரவையை நீக்கிய அடுத்த சில நிமிடங்களில் இந்த பேச்சுவார்த்தை நடந்தது.
முபாரக்கிடம் ஒபாமா பேசுகையில், போராட்டக்காரர்கள் மீது படை பலத்தை பிரயோகிப்பதை தவிருங்கள். ராணுவத்தைக் கொண்டு போராட்டக்கார்களை ஒடுக்கினால் நிலைமை மேலும் விபரீதமாகும் வாய்ப்புள்ளது. வன்முறை இல்லாமல், அமைதி வழியில் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர முயல வேண்டும் என்று கேட்டுக் கொண்டார் முபாரக்.












Click it and Unblock the Notifications