ஜெயகுமாருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் நிர்வாகி மீது காங். தாக்குதல்
மதுரை: இலங்கை கடற்படையால் கொல்லப்பட்ட தமிழக மீனவர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக போஸ்டர் ஒட்டிய நாம் தமிழர் இயக்க நிர்வாகி மீது காங்கிரஸ் பிரமுகர் தாக்குதல் நடத்திய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக மீனவர் ஜெயக்குமார் இலங்கை கடற்படையால் இறக்கமின்றி கழுத்தை நெரித்துக் கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
இந்த நிலையில் மீனவர் ஜெயக்குமாருக்காக மதுரையில் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த காந்தி என்பவர் மீனவர்களை காக்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து சுவரொட்டி ஒட்டினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் அவரை ஒட்டவிடாமல் சுவரொட்டியை கிழித்து எறிந்தார்.
மேலும், காந்தியை ஆனையூர் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் பிரமுகர் கருப்பையா என்பவர் அரிவாளால் வெட்ட முயன்றார். அப்போது இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கருப்பையாவின் மண்டை உடைந்தது. இதையடுத்து காந்தி கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில், காந்தியின் கைதுக்கு நாம் தமிழர் இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து நாம் தமிழர் கட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
தொடர்ந்து பேச்சுரிமைக்க்கும். கருத்துரிமைக்கும் தடை விதித்து பொய் வழக்கு போட்டு தங்களது மக்கள் விரோத போக்கை வெளிப்படுத்தி வரும் மத்திய, மாநில அரசுகள் தற்போது ஆயுதத்தையும் கையில் எடுத்து எம் மக்களை ஒடுக்க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சியின் இவ்வெறிச் செயலை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
இவ்வாறு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் இயக்குனர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications