முன்னாள் திமுக அமைச்சர் என்.கே.கே.பி. ராஜா விடுதலையை எதிர்த்து வழக்கு: சிபிசிஐடிக்கு நோட்டீஸ்
ஈரோடு: பெருந்துறையில் ஆள் கடத்தல் மற்றும் கொலை முயற்சி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தி்முக அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா விடுதலையை எதிர்த்து நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் சிவபாலன் என்பவரை கடத்தி, கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறி குற்றம் சாட்டப்பட்ட திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி.ராஜா, அவரது மனைவி உள்பட 7 பேரையும் விடுதலை செய்து ஈரோடு மாஜிஸ்திரேட்டு நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 21- ம் தேதி தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை ரத்து செய்யக்கோரி சிவபாலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,
நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் என்.கே.கே.பி. ராஜாவின் ஆட்கள் என்னை மிரட்டினர். இது தொடர்பாக போலீசாரிடம் புகார் அளித்தேன். அதன் பேரில் என்.கே.கே.பி. ராஜா உள்பட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
ஆனால் ஈரோடு நீதித்துறை நடுவர் இந்த வழக்கில் இருந்து ராஜா உள்பட அனைவரையும் விடுவித்து கடந்த செப்டம்பர் 21-ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.
வழக்கிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு ஈரோடு நீதிமன்றம் அளித்துள்ள காரணங்கள் சரியானது அல்ல. இந்த வழக்கு விசாரணை மிக வேகமாகவும், சட்டத்துக்கு விரோதமாகவும் நடைபெற்றது.
எனவே, ஈரோடு நீதித்துறை நடுவரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.என். பாஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு சி.பி.சி.ஐ.டி. போலீசார், என்.கே.கே.பி.ராஜா உள்பட குற்றம் சாட்டப்பட்ட 7 பேருக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications