மீனவர்கள் மீதான இலங்கைத் தாக்குதலைக் கண்டித்து காரைக்காலில் ஸ்டிரைக்
காரைக்கால் இலங்கை கடற்படை மீனவர்கள் மீது நடத்தி வரும் தாக்குதல்களைக் கண்டித்து இன்று காரைக்கால் கடையடைப்புப் போராட்டம் நடத்தப்படுகிறது. இதனால் காரைக்காலில் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்களைத் தாக்கி வரும் செயலைக் கண்டித்து இன்று கடையடைப்புப் போராட்டத்திற்குக் காரைக்காலில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதை ஏற்று காரைக்கால் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டன. ஒரு கடை கூட திறக்கப்படவில்லை. அதே போல பஸ்களும் ஓடவில்லை, ஆட்டோக்களும் ஓடவில்லை. இதனால் மாணவ, மாணவியர் அலுவலகம் செல்வோர் கடும் பாதிப்படைந்தனர்.
மீனவர்களும் இன்று கடலுக்குப் போகாமல் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதனால் காரைக்காலில் இயல்பு நிலை ஸ்தம்பித்தது. காரைக்கால் மேடு, பட்டினச்சேரி, கிளிஞ்சல் மேடு உள்ளிட்ட 11க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்தவர்கள் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஈடுபட்ட 2000க்கும் மேற்பட்டோரைப் போலீஸார் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications