பிரதமரிடம் மீனவர் பிரச்சினை-சோனியாவுடன் சீட் குறித்து கருணாநிதி ஆலோசனை

டெல்லியில் நாளை நடைபெறவுள்ள முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக முதல்வர் கருணாநிதி நேற்று டெல்லி சென்றார் கருணாநிதி. நேற்று அமைச்சர்கள் சரத் பவார், வயலார் ரவி ஆகியோர் கருணாநிதியை சந்தித்துப் பேசினர்.
இன்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அவரிடம் தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு வருவது குறித்து தனது கவலையை தெரிவித்த முதல்வர் இதைத் தடுத்து நிறுத்த உறுதியான நடவடிக்கையை இந்தியா எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் தமிழக மழை வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 1800 கோடி தர வேண்டும் என்று ஏற்கனவே தமிழக அரசு கோரியுள்ளதை பிரதமரிடம் தெரிவித்த முதல்வர், அதை ஒதுக்குமாறும் கேட்டுக் கொண்டார்.
அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, தமிழக மீனவர்கள் மீதான இலங்கைப் படையினரின் தாக்குதல்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங்கிடம் தெளிவாக விளக்கியுள்ளேன். இந்த விவகாரத்தில் தமிழகத்திற்குத் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று பிரதமர் உறுதியளித்துள்ளார். மேலும் கடலோரப் பாதுகாப்பை அதிகரிப்பது குறித்து அந்தோணியிடம் பேசுவதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
தமிழக மழை வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தமிழக அரசு கோரியுள்ள ரூ. 1872 கோடி நிதியை ஒதுக்கித் தருமாறு வலியுறுத்தினேன். விரைவில் அது வந்து சேரும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தில், திருவொற்றியூர் வரையிலான திட்ட நீட்டிப்பு குறித்து விரைவில் ஒப்புதல் தரப்படும் என்றும் பிரதமர் உறுதியளித்தார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தொழில்நுட்பக் குழு ஆய்வு தேவையற்றது என்று பிரதமரிடத்தில் எடுத்துரைத்தேன். இதுகுறித்துக் கவனிப்பதாக அவர் தெரிவித்தார் என்றார் கருணாநிதி.
அப்போது தமிழக, தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பேசப்பட்டது.
சோனியாவுடன் முக்கிய சந்திப்பு
பின்னர் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது வீட்டில் முதல்வர் கருணாநிதி சந்தித்துப் பேசினார்.
அப்போது தமிழக, தேசிய அரசியல் நிலவரம் மற்றும் தமிழக சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீடு ஆகியவை குறித்து பேசப்பட்டது.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புரட்சி பாரதம், புதிய நீதிக் கட்சி ஆகியவை உள்ளன. இதில் பாமகவும் இணையும் என்று தெரிகிறது.
திமுகவிடம் காங்கிரஸ் 80 இடங்கள் வரை கோருவதாகத் தெரிகிறது. ஆனால், திமுக 50 முதல் 55 இடங்கள் வரை தரத் தயாராக உள்ளதாகத் தெரிகிறது. மத்திய அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்த ராசாவுக்குப் பதில் யாரையும் நியமிக்கக் கோராமல், ஒரு கேபினட் அமைச்சர் பதவியையே விட்டுத் தந்துவிட்டதால், காங்கிரசும் தொகுதிப் பங்கீடு விஷயத்தில் விட்டுக் கொடுத்து நடந்து கொள்ள வேண்டும் என்று திமுக கூறியுள்ளது.
ராசாவை நீக்கிய பின்னர் முதல் சந்திப்பு:
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து ராசாவை நெருக்கடி கொடுத்து நீக்கிய பின்னர் தற்போதுதான் முதல் முறையாக பிரதமர் மன்மோகன் சிங்கையும் சோனியா காந்தியையும் முதல்வர் கருணாநிதி சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications