இலங்கை சென்றார் நிரூபமா ராவ்-மீனவர் பிரச்சினை குறித்து பேச்சு
சென்னை: மத்திய வெளியுறவு அமைச்சர் நிரூபமா ராவ் நேற்று கொழும்பு சென்றடைந்தார். தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் தொடர்ந்து தாக்கிக் கொன்று வரும் விவகாரம் குறித்து இலங்கையுடன் அவர் பேச்சு நடத்தவுள்ளார்.
முன்னதாக பெங்களூரிலிருந்து நேற்று மாலை சென்னை வந்த நிரூபமா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அண்மைக் காலமாக இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவது அதிகரித்து வருகிறது. கடந்த 15 நாட்களுக்குள் இரண்டு மீனவர்கள் பலியாகியுள்ளனர்.
இதற்கு தீர்வு காணும் வகையிலும், தமிழக மீனவர்களுக்கு இலங்கைக் கடற்படையால் பிரச்னை ஏற்படாத வகையில் நிரந்தரத் தீர்வு ஏற்படுவதற்காக இந்திய அரசு சார்பில் இலங்கை செல்கிறேன்.
அந்த நாட்டில் உயர் அதிகாரிகள் அடங்கிய குழுக்கள், முக்கிய தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்படவுள்ளது. ஏற்கெனவே இந்திய - இலங்கை அரசுகளின் புரிந்துணர்வு ஒப்பந்தப்படி கடலோர பகுதியில் கூட்டுக் குழு அமைத்து காண்காணிக்கப்படும்.
மீனவர்களை சுட்டுக் கொல்வது என்பது நிரந்தரத் தீர்வு அல்ல, சரியான தீர்வும் அல்ல. இரு நாடுகளிடையேயும் அமைதி நிலவ, துப்பாக்கிச் சூடு நிறுத்தப்பட வேண்டும். இதுதொடர்பாக புதிய ஒப்பந்தம் ஒன்றும் ஏற்படுத்தப்படும். இதன் மூலம் இனி எந்த மீனவரும் சுடப்படும் நிலை உருவாகாது.
என்னைப் பொறுத்தவரை எல்லை மீறாமல் மீன் பிடித்தால் இதுபோன்ற சூழ்நிலைகளை தவிர்க்கலாம் என்றார் நிரூபமா.
தனது பயணத்தின்போது இலங்கை வெளியுறவு அமைச்சர் பெரீஸையும் நிரூபமா சந்திப்பார் என்று தெரிகிறது. ராஜபக்சேவை அவர் சந்திப்பாரா என்பது தெரியவில்லை.












Click it and Unblock the Notifications