திமுகவை வீழ்த்த வலுவான கூட்டணி அமைவது அவசியம்-தா.பாண்டியன்
சென்னை: தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தக்கூடிய வலுவான கூட்டணி அமைவது அவசியம். அ.தி.மு.க. தலைமையில் அத்தகைய வலுவான கூட்டணி அமையும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வலுவான கூட்டுப் பிரசாரம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
சென்னையில் அதிமுகவுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக் குழு நேற்று சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு தொடர்பாக முதல் சுற்றுப் பேச்சுவார்த்தையை மேற்கொண்டது.
பேச்சுவார்த்தைக்குப் பின்னர் குழுவின் தலைவரும், மாநிலச் செயலாளருமான தா.பாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, மாநில தி.மு.க. அரசு ஆகியவற்றின் தவறான, மக்கள் விரோத பொருளாதார கொள்கைகள் காரணமாக விலைவாசி விஷம் போல் ஏறி விட்டது. இதன் சுமையை தாங்க முடியாமல், மக்கள் அவதிப்படுகின்றனர்.
இந்த விலைவாசி உயர்வுக்கு காரணமான தி.மு.க. அரசை அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தக்கூடிய வலுவான கூட்டணி அமைவது அவசியம். அ.தி.மு.க. தலைமையில் அத்தகைய வலுவான கூட்டணி அமையும். மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து வலுவான கூட்டுப் பிரசாரம் மக்களிடம் எடுத்துச் செல்லப்படும்.
தொகுதி பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் எங்கள் கட்சிக்கான தொகுதிகள் பற்றி இறுதி செய்யப்படும் என்றார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தது. 10 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் ஆறில் வென்றது.
இந்த முறை 20 தொகுதிகளை அது அதிமுகவிடம் கேட்டுள்ளதாக தெரிகிறது. இருப்பினும் 15 தொகுதிகள் வரை அதிமுக தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிப்ரவரி 5-ம் தேதி சென்னையில் அந்தக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. அந்தக் கூட்டத்தில், அ.தி.மு.க.விடம் கேட்க வேண்டிய தொகுதிகளின் பட்டியல் இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது.
ஏற்கனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் அதிமுக பேச்சு நடத்தி முடித்துள்ளது. தற்போது சிபிஐயுடன் பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்து மதிமுக, புதிய தமிழகம் உள்ளிட்டவற்றுடன் பேச்சுவார்த்தை முடிவடையும்.
பெரும் குழப்பமான நிலையில் காணப்படும் தேமுதிகவுடன் தொடர்ந்து ரகசியப் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து வருவதாக கூறப்படுவதால் அந்தக் கட்சியின் நிலை இன்னும் கேள்விக்குறியாகவே உள்ளது.












Click it and Unblock the Notifications