சோனியாவால் அடையாளம் காட்டப்படும் கூட்டணியை வெற்றி பெற வைப்போம்-இளங்கோவன்
சென்னை: மீசையில் மண் ஒட்டவில்லை கதையாக மாறியுள்ளது ஈவிகேஎஸ் இளங்கோவனின் பேச்சு. திமுகவுடன் கூட்டணி உறுதியாகி, தொகுதிப் பங்கீடு வரை போய் விட்ட நிலையில், சோனியா காந்தி அடையாளம் காட்டுவோரையே வெற்றி பெற வைப்போம் என்று பேசியுள்ளார் இளங்கோவன்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த, அதிமுகவினர் காங்கிரஸில் சேரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இளங்கோவன் பேசுகையில்,
சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி விட்டது. இதற்கு முன்பு நாம் பல கருத்துகளைப் பேசியிருக்கலாம். காங்கிரஸ் ஒரு மிகப் பெரிய ஜனநாயகக் கட்சி. இங்குள்ள யார் வேண்டுமானாலும், எதைப் பற்றி வேண்டுமானாலும் பேசலாம். எனினும், இறுதியில் கட்சித் தலைவர் என்ன முடிவு எடுக்கிறாரோ, அந்த முடிவுக்குக் கட்டுப்பட்டு செயல்பட வேண்டும்.
வரும் தேர்தலில் சோனியா காந்தி அடையாளம் காட்டும் கூட்டணியை நாம் வெற்றி பெறச் செய்வோம். அதற்காகக் கடுமையாக உழைப்போம்.
தமிழகத்தில் இப்போதுள்ள சூழ்நிலையில், கூட்டணி விஷயத்தில் நமது கட்சித் தலைமை இப்படி ஒரு முடிவு எடுக்கிறதே என்று நம்மிடம் சோர்வு ஏற்படலாம். பொறுமை காப்போம்.
இப்போது, நம் கட்சியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக வர வாய்ப்பு இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாம் அமைச்சரவையில் இடம்பெறும் சூழல் இப்போது ஏற்பட்டுள்ளது.
இதுவரை நம்மை தாக்காமல், தி.மு.க.வை மட்டும் கடுமையாக தாக்கி வந்த சில கட்சிகள், இப்போது நம் மீது தாக்குதலைத் தொடங்கியிருக்கிறார்கள். மத்திய அமைச்சர் கபில் சிபலை முதலில் தாக்கியுள்ளனர்.
இதேபோல் ஊழல், அது இதுவெனக் கூறி காங்கிரஸ் தலைமை மீது கொச்சையான தாக்குதலைத் தொடுக்கும் திட்டம் இருந்தால், அதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.
அதையும் மீறி, டெல்லி மீது நீங்கள் தாக்குதல் தொடுத்தால், அது, சென்னைக்கே திரும்பி நீங்கள் இருக்கும் இடம் நோக்கி வரும் என்று எச்சரிக்கிறோம்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடந்துள்ளது என்று கூறுவது யூகத்தின் அடிப்படையிலானது. இது தொடர்பாக வெவ்வேறு துறைகளின் சார்பில், 7 தனித்தனி விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இதன் பிறகும் நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைதான் வேண்டும் என்று கூறி, பா.ஜ.க.வினர் நாடாளுமன்றத்தை முடக்குவது, அவர்களுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லாததையே காட்டுகிறது என்றார் இளங்கோவன்.












Click it and Unblock the Notifications