6 தமிழர்கள் உள்பட 280 இந்தியர்கள் எகிப்திலிருந்து மீண்டு வந்தனர்
சென்னை: எகிப்திலிருந்து 6 தமிழர்கள் உள்பட 280 இந்தியர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.
எகிப்தில் தாங்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அங்கிருந்து தப்பி மீண்டு வந்துள்ளதாகவும், தங்களை மீட்ட இந்திய அரசுக்கும், எகிப்து அரசுக்கும் நன்றி தெரிவிப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.
கணேஷ் ராஜன், திணேஷ், ராம், சையத், பிரபு, பூர்ணசந்திரன் ஆகியோர் எகிப்திலிருந்து மீண்டு இன்று காலை சென்னை வந்து சேர்ந்தனர்.
விமான நிலையத்தில் அவர்கள் செய்தியாளர்களிடம் பேசுகையில், எகிப்தில் நடந்து வருவது மக்கள் போராட்டம். அவர்கள் வெளிநாட்டினருக்கோ, தங்களது சொந்த நாட்டினருக்கோ எந்த விதத்திலும் பிரச்சினை தராமல் மிகவும் அமைதியான முறையில் போராடி வருகின்றனர்.
எங்களுக்கு போராட்டக்காரர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. அடிப்படையில் எகிப்தியர்கள் மிகவும் நட்புணர்வுடன் கூடியவர்கள். நாங்கள் கிட்டத்தட்ட வீட்டுக் காவலில் இருப்பது போலவே இருந்தோம்.
ராணுவம் யாருக்கும் எந்தத் தொந்தரவும் தராமல் பாதுகாப்புப் பணியை மட்டுமே செய்து வருகிறது. உண்மையில் நாங்கள் ராணுவத்தின் உதவியுடன்தான் தப்பி விமான நிலையத்தை அடைந்தோம். அங்கிருந்து தாயகம் வந்து சேர்ந்துள்ளோம் என்றனர்.
இன்று மும்பைக்கு வந்த 2வது ஏர் இந்தியா விமானத்தில் மொத்தம் 280 இந்தியர்கள் இடம் பெற்றிருந்தனர். இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விமானம் மும்பை வந்து சேர்ந்தது. ஏற்கனவே 320 பேர் திங்கள்கிழமை எகிப்திலிருந்து அழைத்து வரப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications