தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச திமுக, காங். குழுக்கள் அமைப்பு-கருணாநிதி
டெல்லி: சட்டசபைத் தேர்தலை திமுகவும், காங்கிரஸும் இணைந்து சந்திக்கும். இக்கூட்டணி வலுவாக உள்ளது. இரு கட்சிகள் சார்பிலும் தொகுதிப் பங்கீடு குறித்துப் பேச குழுக்கள் அமைக்கப்படும். அதன் பின்னர் தொகுதிகள் விவரத்தை முடிவு செய்வோம் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
டெல்லி சென்றுள்ள முதல்வர் கருணாநிதி நேற்று காலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசினார். பின்னர் பிற்பகலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது காங்கிரஸ் சார்பில் சோனியா காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி, அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர். திமுக சார்பில் முதல்வருடன், மகள் கனிமொழி, அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் டி.ஆர்.பாலு உடன் இருந்தனர்.
ராகுல் என்ன பேசினார்?
கிட்டத்தட்ட முக்கால் மணி நேரம் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது தேர்தலை எப்படி சந்திப்பது, ராசா விவகாரம், தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவை குறித்துப் பேசப்பட்டது. தமிழகத்திற்கு பலமுறை வந்துள்ள ராகுல் காந்தி ஒரு முறை கூட முதல்வர் கருணாநிதியை சந்தித்ததில்லை. இந்த நிலையில் நேற்றைய பேச்சுவார்த்தையின்போது அவரும் உடன் இருந்தது எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.
இருப்பினும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக அவர் ஏதேனும் சொன்னாரா என்பது குறித்து இரு தரப்பும் கருத்து தெரிவிக்கவில்லை.
சந்திப்புக்குப் பின்னர் முதல்வர் கருணாநிதியை செய்தியாளர்கள் சந்தித்தனர்.
சோனியா காந்தியை சந்தித்த போது என்ன பேசினீர்கள், எவ்வளவு நேரம் பேசினீர்கள் என்ற கேள்விக்கு,
சோனியாகாந்தியுடன் முக்கால் மணி நேரம் விவாதித்தோம். காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி தொடருகிறது. தொகுதிகளைப் பற்றி விவரங்கள், எண்ணிக்கை பற்றி விவாதிக்க காங்கிரஸ் சார்பில் ஒரு குழுவினை அமைக்கிறார்கள். அந்தக் குழுவில் யார் யார் இடம் பெறுவார்கள் என்பதை விரைவில் அறிவிப்பார்கள். அதன் பிறகு எங்களுடைய கூட்டணிப் பணிகள் தொடரும் என்றார் முதல்வர்.
கூட்டம் எப்போது நடைபெறும் என்ற கேள்விக்கு, குழு அமைத்த பிறகுதான் என்று தனது 'ஸ்டைலில்' பதிலளித்தார்.
பேச்சுவார்த்தை திருப்தியாக இருந்ததாகவும் கூறினார் முதல்வர் கருணாநிதி.
இந்த சந்திப்புக்குப் பின்னர் தமிழ்நாடு இல்லம் திரும்பிய முதல்வரை உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம், மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன், மாநில காங்கிரஸ் தலைவர் தங்கபாலு ஆகியோர் சந்தித்துப் பேசினர். இவர்கள் மூவரும் தமிழகத்தில் தனித் தனி கோஷ்டிகளாக செயல்பட்டு வருபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதியை சந்தித்து விட்டு வந்த பின்னர் தங்கபாலு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் தி.மு.க தலைமையிலான கூட்டணி, பலம் வாய்ந்ததாகும். இந்த கூட்டணி தேர்தலில் மிகப் பெரிய வெற்றி பெறும். மத்திய மாநில அரசுகளின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள், வெற்றிக்கு முக்கிய காரணமாக அமையும்.
தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியில் தற்போது விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. மற்ற தோழமை கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். கூட்டணியின் தலைவரும், தமிழக முதல்வருமான கருணாநிதி கூட்டணி பற்றி இறுதி முடிவை எடுப்பார் என்றார்.












Click it and Unblock the Notifications