சுயமாகவே ராஜ்யசபா உறுப்பினரை தேர்ந்தெடுப்பதற்காக 40 சீட்களை எதிர்பார்க்கும் பாமக

பாமக எந்தக் கூட்டணியில் இடம் பெறப் போகிறது என்பது மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. திமுக கூட்டணியில் அது இடம் பெற்றிருப்பதாக முதல்வர் கருணாநிதி கூறியதை உடனடியாக மறுத்து விட்டார் ராமதாஸ். இதையடுத்து நாங்களும் அதுகுறித்து முடிவெடுக்கவில்லை என்று கருணாநிதியும் கூறி விட்டார்.
இந்த நிலையில் பாமகவின் எதிர்பார்ப்பு என்ன, அதற்கான காரணம் என்ன என்று தெரிய வந்துள்ளது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற பாமக 31 தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இடையில் லோக்சபா தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்கு மாறிப் போட்டியிட்டது பாமக. சமீபத்தில் மீண்டும் திமுகவுக்கு வரத் தூது விட்டது. இந்த தூதுக்களுக்கு பல்வேறு பெயர்களை பாமக கூறினாலும், உண்மையில் தொகுதிப் பங்கீடு தொடர்பாகவே பேசப்பட்டுள்ளது.
இந்தப் பேச்சுக்களின்போது தங்களுக்கு கூடுதல் தொகுதிகள் வேண்டும், அதாவது 40 இடங்கள் தேவை என்று பாமக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஒரு கட்டத்தில் 50 தொகுதிகள் வரை கேட்டுள்ளனர்.
குறைந்தபட்சம் 35 தொகுதியாவது வேண்டும் என்றும் பாமக வலியுறுத்தியுள்ளது. ஆனால் இதற்கு திமுக உடன்படவில்லை.25 தொகுதிகளில் ஆரம்பித்து கடைசியாக 30 அல்லது 31 தொகுதி வரை தர முடியும் என்று தெரிவிக்கப்பட்டதாம்.
ஆனால் இதை பாமக ஏற்கவில்லை. 40 அல்லது 35 என்ற நிலையில் அது உறுதியாக இருந்தது. இதற்கு முக்கியக் காரணம், ஒருவரை ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்க குறைந்தது 34 உறுப்பினர்கள் தேவை. இந்த பலத்தை சுயமாகவே கொண்டிருந்தால் கூட்டணியிலிருந்து கழன்று கொண்டாலும் கூட சுயமாகவே ஒருவரை (வேறு யாரை, அன்புமணியைத்தான்) தேர்ந்தெடுப்பதில் சிக்கல் இல்லாமல் போகும் என்பதால்தான் 35 என்ற குறைந்தபட்ச நிலையிலிருந்து இறங்கி வர பாமக மறுத்ததாம்.
இதனால்தான் திமுக, பாமக இடையே திடீர் முட்டல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications