சட்டசபை தேர்தல்: நாளை திமுக பொதுக்குழு கூடுகிறது

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிபிஐயால் முன்னாள் மத்திய அமைச்சர் ராசா கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இக் கூட்டம் நாளை நடப்பது குறிப்பிடத்தக்கது.
திமுக கூட்டணியில் இப்போது காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், முஸ்லிம் லீக், புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் உள்ளன. பாமகவும் இதில் சேரலாம் என்று தெரிகிறது. அதே போல கொங்கு முன்னேற்றக் கழகத்தையும் கூட்டணிக்குள் இழுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந் நிலையில் தேர்தலுக்கான வியூகங்கள் அமைக்க திமுக தனது பொதுக் குழுவை நாளை கூட்டியுள்ளது. சென்னை அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் காலை 10 மணிக்குத் தொடங்கும் இக் கூட்டத்துக்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் ஆற்காடு வீராசாமி, தென்மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி, துணைச் செயலாளர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, சற்குண பாண்டியன், அமைப்பு செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி., கல்யாணசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
திமுக பொதுக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், மாவட்டச் செயலாளர்கள், ஒன்றிய- நகர நிர்வாகிகள், தேர்ந்து எடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என சுமார் 2,000 பேர் இதில் பங்கேற்கிறார்கள்.
திமுக தணிக்கைக் குழு அறிக்கையும் தாக்கல் செய்யப்படுகிறது. முக்கிய தீர்மானங்களும் நிறைவேற்றப்படுகின்றன.












Click it and Unblock the Notifications