தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை-பழ.நெடுமாறன்
ஈரோடு: ஈழத் தமிழர்கள் குறித்து மத்திய அரசுக்கோ அல்லது மாநில அரசுக்கோ எந்தவித அக்கறையும் இல்லை. 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்து எழுந்தால் தான் தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் காக்க முடியும் என்று பழ.நெடுமாறன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழர்களுக்காக உயிர் நீத்த முத்துக்குமார் நினைவு வீரவணக்க நாள் கூட்டம் ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் நடைபெற்றது. தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கச் செயலர் பாவேந்தன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது,
முத்துக்குமார் ஈழத் தமிழர்களுக்காகவும், தமிழ் தேசிய இன உணர்வாலும்தான் தனது உயிரை தியாகம் செய்தார். அவரது தியாகம் தமிழகத்தில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமில்லாமல் மேலும் 15 பேர் தங்கள் உயிரை ஈழத் தமிழர்களுக்காக தியாகம் செய்தனர்.
அவ்வாறு உயிர் நீத்தவர்கள் அனைவருமே வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்ந்த ஏழை மக்கள். தங்களிடம் உயிரைத் தவிர வேறு ஆயுதம் இல்லை என்று நினைத்து அதை தியாகம் செய்துவிட்டனர். அவர்கள் குடும்பத்தினரோ அரசு அளித்த நிவாரண நிதியை ஏற்க மறுத்துவிட்டனர். இந்த இன உணர்வு தமிழக இளைஞர்களுக்கு வர வேண்டும்.
கடந்த 27 ஆண்டுகளில் 500 க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை ஈவு இறக்கமின்றி கொன்று குவித்துள்ளது. இந்தக் கொடுமையை ஏன் என்று கோட்பாரில்லை. இந்தியா உலகின் 5-வது மிகப் பெரிய கடற்படை கொண்ட நாடு. ஆனால் அதனால் ஒரு சின்ன நாட்டின் கடற்படையை தடுத்து நிறுத்த முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? தமிழர்கள் என்பதால் தான் எதுவும் செய்யாமல் வேடிக்கை பார்க்கிறார்கள் என்பதே உண்மை.
எனவே தமிழக மீனவர்களையும், எஞ்சியுள்ள ஈழத் தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமெனில் தமிழகத்தில் உள்ள 6.5 கோடி தமிழ் மக்களும் கொதித்தெழ வேண்டும்.
தமிழ்ர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு அக்கறை இல்லை. இன்று ஈழத் தமிழர்களுக்கு ஏற்பட்டுள்ள நிலை தான் நாளை உலகத் தமிழர்களுக்கும், தமிழகத்தில் உள்ள தமிழர்களுக்கும் ஏற்படும்.
தமிழ் இனம் ஒன்று சேர்ந்தால் அதை யாராலும் வெல்ல முடியாது. இன்று, உலகத் தமிழினம் அழிவின் விளிம்பில் உள்ளது என்பதை இப்போதாவது உண்ர்ந்து செயல்படாவிட்டால் நமக்கு விடிவே கிடையாது. எஞ்சியிருக்கும் ஈழத் தமிழர்களை காக்கும் கடமை நம்முடையது என்றார்.












Click it and Unblock the Notifications