இறங்கி வரும் பாமக-வீரபாண்டி ஆறுமுகத்துடன் ராமதாஸ், ஜி.கே.மணி சந்திப்பு
சென்னை: முதல்வர் கருணாநிதிக்கு முகத்தில் அடித்தாற் போல பதிலளித்த டாக்டர் ராமதாஸின் செயலால், இப்போது கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்று முதல்வர் கருணாநிதி கூறி விட்டார். இதையடுத்து திமுகவுடன் சமாதானமாகப் போக பாமக முயற்சியில் இறங்கியுள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி தலைமையில் பாமகவினர், சேலம் மருத்துவமனையில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை சந்தித்துப் பேசினர்.
இது மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று ஜி.கே.மணி பின்னர் கூறினார். இருப்பினும் வீரபாண்டியார் மூலமாக திமுக தலைமையை சமாதமானப்படுத்த பாமக முயற்சிகளில் இறங்கியிருப்பதாக இது கருதப்படுகிறது.
ஜி.கே.மணியுடன் சேலம் மாவட்ட பாமக எம்.எல்.ஏக்கள் கண்ணையன்,தமிழரசு, காவேரி ஆகியோரும் உடன் இருந்தனர். இருப்பினும் வீரபாண்டி ஆறுமுகத்துடன் சில நிமிடங்கள் மணி தனியாகப் பேசினார். அப்போது எம்.எல்.ஏக்கள் மூவரும் வெளியில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர். எனவே கருணாநிதியை சமாதானப்படுத்த வீரபாண்டி ஆறுமுகத்திடம் பாமக கோரிக்கை வைத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ராமதாசும் சந்திப்பு:
இந் நிலையில் வீரபாண்டி ஆறுமுகத்தை பாமக நிறுவனர் ராமதாசும் சந்தித்துப் பேசினார்.
நலம் விசாரிக்கவே இந்தச் சந்திப்பு நடந்ததாகக் கூறப்பட்டாலும் திமுகவுடனான உரசலை சரி செய்யவும் இந்த வாய்ப்பை பாமக பயன்படுத்திக் கொண்டதாகத் தெரிகிறது.
இதற்கிடையே ராமதாசுடன் சுற்றுப்பயண நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட ஜி.கே.மணி இன்று காலை திடீரென சென்னை புறப்பட்டார். நாளை திமுக பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் நிலையில் அவர் சென்னை விரைந்தது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.












Click it and Unblock the Notifications