திமுக கூட்டணியில் பாமகவை சேர்க்க சோனியா எதிர்ப்பு-மீண்டும் அதிமுகவுக்கு ராமதாஸ் தூது?

Subscribe to Oneindia Tamil

Ramdoss and Jayalalithaa
சென்னை: திமுக கூட்டணியில் பாமகவை மீண்டும் சேர்ப்பதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி எதிர்ப்புத் தெரிவித்துள்ளதாலும், பாமகவுக்கு 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என திமுக கூறிவிட்டதாலும் மீண்டும் அதிமுக கூட்டணியில் சேர பாமக தலைமை தூது விட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறும் பாமகவுக்கு இம்முறை ஆரம்பம் முதலே பிரச்சனை ஆரம்பித்துவிட்டது. அதிக இடங்கள் தரும் கட்சியுடன் கூட்டணி என்ற அவரது வழக்கமான அரசியல் விளையாட்டு இம்முறை திமுகவிடமும் அதிமுகவிடமும் எடுபடவில்லை.

அதிமுக கூட்டணியில் விஜய்காந்த்தை சேர்க்க அக் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா மிகவும் தீவிரம் காட்டி வருகிறார். ஆனால், தேமுதிகவோ 80 இடங்கள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி கேட்டு வருகிறது.

இதனால் விஜய்காந்துடன் கூட்டணி அமைவது கடினம் என்பதால், எதற்கும் இருக்கட்டும் என்று பாமகவுடனும் அதிமுக பேச்சு நடத்தி வருகிறது. அ.தி.மு.கவிடம் பா.ம.க சார்பில் காடுவெட்டி குரு பேசி வந்தார்.

ஆனால், விஜய்காந்த் கூட்டணிக்குள் வந்துவிட்டால் பாமகவை வேண்டாம் என்று சொல்லக் கூட ஜெயலலிதா தயங்க மாட்டார் என்ற அச்சம் அக் கட்சியின் தலைவர் ராமதாசிடம் உள்ளது. இதனால் திமுக கூட்டணியில் சேரத் தயார் என்றரீதியில் அவர் பேசி வந்தார். திமுகவுடன் ஜி.கே.மணி மூலம் பேச்சு நடத்தி வந்தார்.

இதையடுத்து கூட்டணியில் பாமக இருப்பதாக முதல்வர் கருணாநிதி டெல்லியில் அறிவிக்க, முடிவெடுக்கவில்லை என்று ராமதாஸ் பல்டி அடிக்க, நாங்களும் இன்னும் முடிவெடுக்கவில்லை என்று அந்தர் பல்டி அடித்தார் கருணாநிதி.

ஆனால், பாமக விஷயத்தில் கருணாநிதி தனது முடிவை மாற்றிக் கொண்டதற்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தான் காரணம் என்றும் கூறப்படுகிறது.

இதை நேற்றைய திமுக பொதுக் குழுக் கூட்டத்தில் கருணாநிதியே தனது கட்சியின் நிர்வாகிகளிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. அவர் கூறுகையில், கடந்த வாரம் சோனியா காந்தியை சந்தித்தபோது கூட்டணியில் பா.ம.கவைச் சேர்ப்பது பற்றிய பேச்சு வந்தது. அப்போது சோனியா, விரோதிகளைக்கூட மன்னிக்கலாம்; துரோகிகளை மன்னிக்கக் கூடாது. 2009ம் ஆண்டு வரை நம்முடன் ஆட்சியில் இருந்துவிட்டு திடீரென கூட்டணியைவிட்டு விலகிச் சென்ற பா.ம.கவை இப்போது கூட்டணியில் சேர்க்க வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்? என்று கேட்டார். அப்போது என்னால் எந்தப் பதிலும் கூற முடியவில்லை என்று கருணாநிதி கூறியதாகத் தெரிகிறது.

இதற்கிடையே ராமதாஸின் மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி டெல்லி சென்று காங்கிரஸ் தலைமையைச் சமாதானம் செய்து வருவதாகவும், இதையடுத்து கூட்டணியில் அவர்களை சேர்க்க சோனியாவும் திமுகவுக்கு அனுமதி தந்ததாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் இடங்களைக் குறைத்துக் கொடுக்குமாறும் கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து நேறபாமகவுக்கு 25 இடங்கள் மட்டுமே தர முடியும் என்று திமுக தெரிவித்துள்ளது. முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் ஸ்டாலின் ஆகியோருடன் நேற்று முன்தினம் மணி பேச்சு நடத்தியபோது திமுக இதைத் தெரிவித்துவிட்டது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக- காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. 31 தொகுதிகளில் போட்டியிட்டு 18 இடங்களில் வெற்றி பெற்றது. இம்முறை 25 இடங்கள் மட்டும் தர முடியும் என்று திமுக தெரிவித்துவிட்டது.

மேலும் ராஜ்யசபா சீட் எல்லாம் தர முடியாது, அத்துடன் குறிப்பிட்டு எந்தத்தொகுதியையும் பா.ம.க. கேட்கக் கூடாது என்றும் தி.மு.க நிபந்தனை விதித்துவிட்டது.

இது பற்றி ராமதாஸ், அன்புமணி ஆகியோரிடம் தெரிவிப்பதாகக் கூறிவிட்டு ஜி.கே. மணி வெளியேறினார்.

தி.மு.கவுடனான தொகுதி பேரம் சுமுகமாக முடியாததால், மீண்டும் அ.தி.மு.கவிடம் பேச்சு நடத்த குருவை தூது அனுப்பியுள்ளது பா.ம.க.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+