'நிரபராதி' ராசாவை கைது செய்த காங்.குடன் கூட்டணி ஏன் கூட்டணி ? கருணாநிதிக்கு தா.பா கேள்வி
சேலம்: ஆ. ராசா கைது செய்யப்பட்டதால் மட்டுமே அவரை குற்றவாளியாக கருத முடியாது என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அப்படியனால் நிரபராதியான ராசாவை கைது செய்த காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் கூட்டணி வைத்திருப்பது ஏன் என விளக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா. பாண்டியன் சேலத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கடைபிடிக்கும் கொள்கையால் இந்திய ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து ஏற்படவிருக்கிறது.
இதன் காரணமாக அனைத்து துறைகளிலும் புகுந்த ஊழல், தற்போது பாதுகாப்பு துறையிலும் புகுந்து விட்டது. இது வரை விமர்சனத்துக்கு ஆளாகாத ராணுவ அதிகாரிகளும், தற்போது ஊழலில் சிக்கி இருப்பது கவலை அளிக்கின்றது.
இந்தியர்கள் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருக்கும் ரூ. 70 லட்சம் கோடி கறுப்பு பணத்தை வெளிக் கொண்டு வர மத்திய அரசுக்கு துணிச்சல் இல்லை. இதனால் இந்தியாவில் பண வீக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும், அதற்கேற்ப மக்கள் வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது நாட்டின் பொருளாதாரம் அபாய எல்லை கோட்டை தொட்டு விட்டது என்பதையே உணர்த்துகிறது.
வரும் தேர்தலில் அ.தி.மு.க. மற்றும் இடதுசாரி கட்சிகள் கூட்டணி அமைத்து, போட்டியிடும். தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் கட்சிகளோடு கூட்டணி சேர தயாராக இருக்கிறோம்.
ஆ. ராசா கைது செய்யப்பட்டதால் மட்டுமே அவர் குற்றவாளியாக கருத முடியாது என தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். அப்படியனால் நிரபராதியான ராசாவை கைது செய்த காங்கிரஸ் கட்சியுடன் இன்னும் கூட்டணி வைத்திருப்பது ஏன் என விளக்க வேண்டும்.
கடந்த 2008ம் ஆண்டு அலைக்கற்றை ஒதுக்கீட்டில் மட்டும் ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 2005ல், தேவாஸ் நிறுவனத்துக்கு அலைக்கற்றை ஒதுக்கீடு செய்ததில், அரசுக்கு ரூ. 2 லட்சம் கோடி இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக தணிக்கை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்துக்கான உரிமத்தை ரத்து செய்ய கோரி, 2007ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு பல புகார்கள் அனுப்பியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.
அதிமுக கூட்டணியில் பாமக சேரலாம்..ஆனால்:
அதிமுக கூட்டணிக்கு பாமக வந்தால் வரவேற்பீர்களா? என்று கேட்டதற்கு, அதிமுகவுடன் எத்தனை கட்சிகள் கூட்டணி அமைக்கிறது என்று இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை. இம்மாத இறுதிக்குள் அது முடிவாகி விடும். இந்தக் கூட்டணியில் பாமக சேர்ந்தால் நாங்கள் ஆட்சேபம் தெரிவிக்கப்போவதில்லை. ஆனால், அவர்களின் நோக்கம் திமுகவை தோற்கடிப்பதாக இருக்க வேண்டும் என்றார்.
திமுக அரசின் திட்டங்கள் கிராமப் பகுதிகளில் வரவேற்பை பெற்றுள்ளதா? என்று கேட்டதற்கு, அரசின் திட்டப் பயன்கள் கிராமபுறங்களில் முழுமையாக சென்றடையவில்லை. குறிப்பாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வெள்ள நிவாரண தொகை போய்ச்சேரவில்லை. கலைஞரின் வீடு வழங்கும் திட்டம் பிரசாரத்திற்கு மட்டும்தான். ஆனால், வாழ்க்கைக்கு பயன்படாது. குடிசைகள் இல்லாத தமிழகம் உருவாவதை வரவேற்கிறோம். புதிய ஆட்சி அமைந்ததும் அத்திட்டம் சீர்திருத்தப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications