ஊட்டியில் பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறிந்தால் ரூ. 50 அபராதம் - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
ஊட்டி: ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை வீசி எறிந்தால் ரூ. 50 அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் ஊட்டி பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் குப்புசாமி தலைமை வகித்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
கடந்த 2000-ம் ஆண்டு முதல் நீலகிரி மாவட்டத்தை பிளாஸ்டிக் பொருட்கள் இல்லாத மாவட்டமாக ஆக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 2005-ம் ஆண்டு பிளாஸ்டிக் உபயோகத் தடை சட்டம் கொண்டு வரப்பட்டாலும், பிஸ்கட், பால், தயிர் போன்ற பொருட்கள் பிளாஸ்டிக் கவர்களில் வருவதால் அதன் பயன்பாட்டை தடை செய்ய முடியவில்லை. இதற்கு விரைவில் மாற்று ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால், கடைகளில் பிளாஸ்டிக் உபயோகப்படுத்துவது கண்டுபிடிக்கபட்டால் ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்.
நீலகிரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் பிளாஸ்டிக் பொருட்களை குப்பை தொட்டியில் போட வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பிளாஸ்டிக் பொருட்களை கண்ட இடத்தில் வீசினால் ரூ. 50 அபராதம் விதிக்கப்படும். இந்த திட்டம் விரைவில் அமுல்படுத்தப்படும் என்றார்.
மாவட்ட நிர்வாகத்தின் இந்த முயற்சிக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.












Click it and Unblock the Notifications