வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகிக்கும் திட்டமில்லை - தமிழக அரசு
சென்னை: சென்னையில் வழங்கப்படுவது போல வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று சட்டசபையில் அமைச்சர் எ.வ.வேலு அறிவித்தார்.
தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரத்தின் போது உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அப்போது நடைபெற்ற விவாதத்தில், சென்னையில் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்ததுபோல, கிராம பகுதிகளிலும் நடமாடும் வேன் மூலம் வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்படுமா? என்று கேள்வி எழுப்பினார் கே.பி.ராமசாமி (தி.மு.க.).
இதற்கு பதிலளித்த உணவு வழங்கல் துறை அமைச்சர் எ.வ.வேலு, கடந்த 10 ஆண்டு காலமாக நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் மலை பகுதிகளில் நடைமுறையில் உள்ளது. கோவை, நீலகிரி, திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம் போன்ற பகுதிகளில் இந்த திட்டம் இப்போதும் நடைமுறையில் உள்ளது. மலைப்பகுதியில் தனியாக ரேஷன் கடைகள் அமைப்பதற்கு இடம் கிடைக்காது.
எனவே அந்த பகுதிக்கு ஒரு குறிப்பிட்ட தேதியில் நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம்தானே தவிர, வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் அல்ல. சென்னையை பொறுத்தவரை சில இடங்களில் 1,400 குடும்ப அட்டைகளை பிரித்து 800 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேஷன் கடை அமைப்பதற்கு இடம் கிடைக்கவில்லை.
வீடு,வீடாக...
குறிப்பாக கோடம்பாக்கம் போன்ற பகுதியில் இடம் கிடைக்கவில்லை. இடம் கிடைக்காத காரணத்தால் கூட்டுறவு நிர்வாகத்தின் மூலமாக சென்னை கோடம்பாக்கத்தில் பரீட்சார்த்த முறையில் முதல் முறையாக நடமாடும் வேன் மூலம் ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. பத்திரிகையில் ரேஷன் பொருட்கள் வீடு, வீடாக கொடுக்கும் திட்டம் இருப்பதாக ஒரு செய்தி வந்தது தவறாகும். வீடு, வீடாக ரேஷன் பொருட்கள் வினியோகம் செய்யும் திட்டம் எதுவும் இப்போது இல்லை, என்றார்.












Click it and Unblock the Notifications