மாதேஸ்வரன் மலைப் பகுதிக்கு குடிநீர்-கர்நாடகத்தை தமிழகம் தடுக்க முடியாது: பொன்முடி

அதே நேரத்தில் காவிரி நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை திமுக அரசு ஒருபோதும் விட்டு கொடுக்காது என்றும் அறிவித்துள்ளது. அதே போல முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையில் கேரள அரசு மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
மேட்டூர் அணை பகுதியில் கர்நாடக அரசு சாலைகள் போட்டு வருவதாகவும், தண்ணீரை எடுப்பதற்கு பைப்புகளை உதைத்து வருவதாகவும் கூறி சட்டசபையில் அதிமுக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சியினர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், கர்நாடக அரசின் இத்தகைய செயலை தடுத்து, தமிழகத்தின் உரிமையை காப்பாற்றுவதற்கு மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கை என்ன என்று கேள்வி எழுப்பினார்.
காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் பேசுகையில், ஏற்கனவே காவிரி நதிநீர் பிரச்சனையில் நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாத கர்நாடக அரசு தற்போது இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. கர்நாடகா மட்டுமல்லாது ஆந்திர மாநில அரசு பாலாறு பிரச்சனையிலும் கேரள அரசு முல்லைப் பெரியாறு பிரச்சனையிலும் தமிழகத்திற்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதால் தமிழகத்தின் உரிமை காக்க அரசியலை மறந்து அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.மேலும் மேட்டூர் அணை பகுதியில் இருந்து தண்ணீர் எடுக்கும் கர்நாடக அரசின் செயலை தடுக்க வேண்டும் என்றார்.
மதிமுக எம்எல்ஏ சதன் திருமலைக்குமார் பேசுகையில், தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் கர்நாடகத்தின் செயலை தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
இதற்கு பதிலளித்துப் பேசிய உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கர்நாடக எல்லையில் உள்ள மாதேஸ்வரன் மலைப் பகுதியில் வாழும் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காகவே காவிரி கரைப் பகுதியில் நீரேற்று நிலையம் அமைத்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்திற்கு குழாய்கள் பதிக்கும் பணிகள் சுமார் 24.54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வந்துள்ளன.
மேட்டூர் அணை பகுதியில் இதற்காக சாலைகள் மட்டுமே அமைக்கப்பட்டு வருகிறது என்றும் செய்திகள் கிடைத்துள்ளன. இந்தத் தகவல் அறிந்ததும் கடந்த ஜனவரி 28ம் தேதி தமிழக நீர்வளத்துறை பொறியாளர்கள் மேட்டூர் அணைப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தி அறிக்கை அளித்துள்ளனர்.
அந்த அறிக்கையில், கர்நாடக எல்லையான கோபிநத்தம் பகுதியில் நீரேற்று நிலையம் அமைக்கப்படுவதாகவும் அதற்கு மண் சாலைகளை மேட்டூர் அணைப் பகுதியில் அமைத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
காவிரி ஆற்றில் இருந்து 27 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாதேஸ்வரன் மலைப்பகுதிக்கு குடிநீர் வழங்குவதற்காகவே குழாய் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக கர்நாடக பொறியாளர்கள் மூலமும்,தகவல்கள் கிடைத்துள்ளன.
ஏற்கனவே நடுவர் மன்றம் அளித்த தீர்ப்பில் கர்நாடக மக்களுக்கு குறிப்பிட்ட அளவிற்கு குடிநீருக்காக தண்ணீர் எடுக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அந்த அடிப்படையில் குடிநீர் தேவைக்காக அவர்கள் தண்ணீர் எடுத்தால் நாம் அதை தடுக்க முடியாது.
இது குறித்து விவரம் அறிவதற்காக தமிழக அரசின் சார்பில் இம்மாதம் 4ம் தேதி கர்நாடக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த பொறியாளர்களும்,மேலும் ஆய்வு செய்து உரிய விசாரணை நடத்தி தகவல் தருமாறு கேட்டிருக்கிறோம்.இந்த பிரச்சனையை பொறுத்தவரை ஒருபோதும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்க மாட்டோம். நாம் ஏற்கனவே மத்திய அரசின் அனுமதி பெற்று காவிரி நீரை ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் பயன்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் அவர்களுடைய எல்லையில் குடிநீருக்கு மட்டுமே அவர்கள் நீர் எடுத்தால் அதைத் தடுக்க முடியாது.இது பற்றிய முழு விவரங்களை அறிவதற்காகத்தான் அரசு சார்பில் கடிதம் அனுப்பி இருக்கிறோம்.
காவிரி நதிநீர் பிரச்சனையை பொறுத்தவரையில் இடைக்கால தீர்ப்பின் அடிப்படையில் 205 டி.எம்.சி. தண்ணீரை பெறுவதற்கு முதலமைச்சரும்,இந்த அரசும் உரிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
முல்லைப் பெரியாறு அணை பிரச்சனையை பொறுத்தவரை நீதிபதி ஆனந்த் தலைமையிலான குழு மற்றும் ராஜமன்னார் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களின் முடிவு வெளிவருவதற்கு முன்பே கேரள அரசு ஒரு சட்டம் ஒன்றை இயற்றியிருக்கிறது.
அதை எதிர்கொள்வதற்குத்தான் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முதல்வர் முடிவு செய்திருக்கிறார் என்றார் பொன்முடி.












Click it and Unblock the Notifications