இழுத்தடிக்கும் விஜய்காந்த்-விஜய்யை பிரச்சாரத்துக்கு இழுக்க ஜெ திட்டம்!

கூட்டணியில் சேர வேண்டுமானால் 80 சீட்கள், துணை முதல்வர் பதவி, தேர்தலை சந்திக்கத் தேவையான 'வைட்டமின் ப'ஆகியவற்றைத் தர வேண்டும் என தேமுதிக தலைவர் விஜய்காந்த் நிபந்தனைகள் போட்டு அதிமுகவை திகிலடையச் செய்துள்ளார்.
அவருடன் அதிமுக தரப்பிலிருந்து பலரும் பேசியதையடுத்து, கொஞ்சம் இறங்கி வந்த விஜய்காந்த் குறைந்தபட்சம் 60 சீட் தர வேண்டும் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், அதிகபட்சம் 35 தொகுதி தான்.. அதுக்கு மேல் தர முடியாது என்று அதிமுக தரப்பு கூறிவிட்டதால் பேச்சுவார்த்தைகள் அப்படியே அந்தரத்தில் தொங்கின்றன.
இந் நிலையில் விஜய்காந்தை பிடித்துத் தொங்குவதை விட பாமகவை கூட்டணிக்குள் இழுப்பதே மேல் என்று ஜெயலலிதாவிடம் எடுத்துச் சொல்லப்பட்டுள்ளது. இதையடுத்து போயஸ் தோட்டதிலிருந்து பாமக தலைவரின் தைலாபுரம் தோட்டத்தை நோக்கி திடீரென பாசம் பொங்கி வழிய ஆரம்பித்துவிட்டதாம்.
இதனால் பாமகவுக்கும் மகிழ்ச்சி தான் என்கிறார்கள். காங்கிரஸ் எதிர்ப்பைக் காட்டி நமக்கு வெறும் 20 தொகுதிகளை மட்டும் தந்து வளைத்துப் போட நினைக்கும் திமுகவை வளைக்க அதிமுகவுடனான இந்த தொடர்பு உதவும் என பாமக நிறுவனர் ராமதாஸ் நினைக்கிறாராம். இதனால் எந்த முடிவையும் எடுக்காமல் இரு தரப்புடனும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார் ராமதாஸ்.
அதே போல விஜய்காந்த் நம்முடன் கைகோர்க்காமல் போனால் பிரச்சாரத்தில் நடிகர் விஜய்யை பயன்படுத்த ஜெயலலிதா திட்டமிட்டுள்ளார். விஜய்யும் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்யத் தயார் என்று கூறிவி்ட்டாராம். விஜய்யின் தந்தை டைரக்டர் எஸ்.ஏ. சந்திரசேகரன் அதிமுகவிலேயே இணைந்து ஏதேனும் தொகுதியில் போட்டியிடுவார் என்றும் கூறப்படுகிறது.
தற்போது பொள்ளாச்சியில் வேலாயுதம் படப்பிடிப்பில் உள்ளார் விஜய். இந்த படப்பிடிப்பு 20ம் தேதிக்குள் முடிந்து விடுமாம். மேலும் ஷங்கரின் நண்பன் படப்பிடிப்பின் இரண்டாவது ஷெட்யூல் முடிந்ததும் விஜய் அதிமுகவுக்காக பிரச்சாரம் செய்வது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள் எஸ்.ஏ.சந்திரசேகரன் தரப்பில்.
விஜய் வருவாரா அல்லது மீண்டும் ஒரு விளக்க அறிக்கைக் கொடுப்பாரா? பார்க்கலாம்!












Click it and Unblock the Notifications