இளநிலை உதவியாளர்கள்-தட்டச்சர்களுக்கு ஊதிய உயர்வு: தமிழக அரசு
சென்னை: அனைத்து துறைகளிலும் பணியாற்றும் தட்டச்சர்கள்,சுருக்கெழுத்தர்கள், இளநிலை உதவியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு ஊதிய உயர்வும், ஊரக வளர்ச்சித் துறையில் பணிபுரியும் துணை தாசில்தார், தாசில்தாருக்கு தனி ஊதியமும் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில்,
தமிழக அலுவலர் குழு, 2009ல் பரிந்துரைகளின்படி அனைத்து துறைகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 ஆகிய பணியிடங்களுக்கு, திருத்திய ஊதிய விகிதம் முறையே 5,200 முதல் 20 ஆயிரத்து 200 ரூபாய், தர ஊதியம் 2,000 மற்றும் 5,200 முதல் 20 ஆயிரத்து 200 ரூபாய், தர ஊதியம் 2,400 அனுமதித்து, 2006 ஜனவரி 1 முதல், கருத்தியலாகவும், 2007 ஜனவரி 1 முதல் பணப் பயன் பெறும் வகையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் சில கோரிக்கைகளை முன்வைத்து, நிறைவேற்றி தர அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். பல்வேறு அமைச்சுப்பணியாளர் சங்கங்களும், ஆசிரியர்களுக்கு ஊதிய விகிதம் திருத்தியமைத்தும், தனி ஊதியம் அனுமதித்தும் அரசு ஆணை வெளியிட்டுள்ளதை சுட்டிக் காட்டின.
மேலும், இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர், சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3 மற்றும் இளநிலை உதவியாளர், வருவாய் உதவியாளர்களின் ஊதிய விகிதங்களை திருத்தி அமைத்தும், வருவாய்த்துறையில் பணியாற்றும் துணை தாசில்தார், தாசில்தார், ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு, அவர்களின் பணிச்சுமை, பணியின் தன்மையை கருதி, தனி ஊதியம் அனுமதித்து ஆணை வெளியிடுமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்தன. அதன் அடிப்படையில், அடிப்படை ஊதியத்தில் ஐந்து சதவீதம் தனி ஊதியம் வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அமைச்சுப் பணியாளர்களில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், உதவியாளர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை 3, ஆகியோரின் ஊதிய முரண்பாடு களைதல் குறித்த நீண்ட கால கோரிக்கையை ஒரு நபர் குழு பரிந்துரைக்கு பின்னர் ஊதிய முரண்பாடுகளை மாற்றியமைத்து, ஊதியத்தில் திருத்தம் செய்து புதிய ஊதிய உயர்வும் வழங்கப்பட்டுள்ளது. துணை தாசில்தார், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு அனுமதிக்கப்பட்டுள்ள தனி ஊதியம், வரும் காலங்களில் ஆண்டு ஊதிய உயர்வுக்கும், அகவிலைப்படிக்கும், ஓய்வூதிய பலன்களுக்கும் கணக்கில் கொள்ளப்படும்.
இந்த ஊதிய திருத்தம் 2006 ஜனவரி 1 முதல் கருத்தியலாகவும், 2011 ஜனவரி 1 முதல் பணப்பயன் பெறும் வகையில் தனி ஊதியம் பிப்ரவரி, 1 முதல் பெறும் வகையில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications