சிரஞ்சீவிக்கு தொண்டர் பலம் இல்லை! - ரோஜா
ஹைதராபாத்: சிரஞ்சீவிக்கு தொண்டர்கள் ஆதரவு, பலம் இல்லை என்றார் நடிகை ரோஜா.
பிரஜா ராஜ்யம் என்ற பெயரில் தனிக்கட்சி தொடங்கி, கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றியும் பெற்ற சிரஞ்சீவி, திடீரென்று கட்சியை காங்கிரசில் சேர்த்தார்.
இதனால் அதிருப்தியடைந்த அவரது கட்சி எம்.எல். ஏ.க்கள் 2 பேர் ஜெகன்மோகன் ரெட்டி அணிக்குத் தாவி விட்டனர்.
இதுகுறித்து ஜெகன்மோகன் ரெட்டி அணியிலுள்ள நடிகை ரோஜா, ஹைதராபரிதில் நிருபர்களிடம் கூறுகையில், "நடிகர் சிரஞ்சீவி சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால்தான் தனிக்கட்சி தொடங்கினார். இவர் ஆந்திர மக்களுக்கு நல்லது செய்வார் என்றுதான் வேறு கட்சிகளில் இருந்தெல்லாம் ஏராளமான தொண்டர்கள் அவரது கட்சியில் சேர்ந்தனர்.
ஆனால் அவர் திடீரென தனது கட்சியை காங்கிரசிடம் விற்று விட்டு அதில் போய் சேர்ந்து விட்டார்.
இனி சிரஞ்சீவியால் தனித்து செயல்பட முடியாது. சோனியா காந்தி- ராகுல்காந்தி ஆகியோரின் புகழ்பாட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் அவரது கட்சியில் இருந்த ஏராளமான தொண்டர்கள் ஜெகன் மோகன் ரெட்டி அணிக்கு வந்து விட்டனர்.
தற்போது அவரது கட்சியைச் சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே அவருக்கு ஆதரவாக உள்ளனர். இனி சிரஞ்சீவிக்கு அரசியலில் எதிர்காலம் இல்லை. அவரை காங்கிரசில் உள்ள மற்ற கோஷ்டி தலைவர்கள் வளர விட மாட்டார்கள். ஜெகன் மோகன் ரெட்டி அணிதான் தற்போது ஆந்திராவில் பலமான அணியாக உள்ளது...", என்றார்.












Click it and Unblock the Notifications