பாமக எம்எல்ஏக்களுக்கு ராமதாஸ் தந்த 'டீ பார்ட்டி'!
சென்னை: தேர்தலுக்கு முந்தைய தமிழக சட்டசபையின் கடைசிக் கூட்டத் தொடர் முடிவடைந்ததையடுத்து தனது கட்சியின் எம்எல்ஏக்களுக்கு டீ பார்ட்டி வைத்தார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.
வழக்கமாக தேர்தல் வந்துவிட்டால் பாமகவுக்கு திமுகவும் அதிமுகவும் வலை வீசும். அதே போல பாமகவும் கூடு விட்டு கூடு பாய்வது போல ஒரு கூட்டணியை விட்டு அடுத்த கூட்டணிக்குத் தாவும்.
ஆனால், இந்தத் தேர்தலில் பாமகவை காத்திருக்க வைத்துவிட்டன திமுகவும் அதிமுகவும். காங்கிரசின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருக்குமாறு திமுக கூறிவிட, விஜய்காந்த் வருகிறாரா இல்லையா என்று பார்த்துவிட்டு பின்னர் பாமகவை சேர்த்துக் கொள்ளும் மன நிலையில் அதிமுக உள்ளது.
இது பாமகவுக்கு மிகப் புதிய அனுபவம். இதுவரை அவர்கள் பிற கட்சிகளுக்கு காட்டிய 'அரசியல் சர்க்கஸ்' இப்போது இலவசமாகவே அவர்களுக்கு காட்டப்பட்டு வருகிறது.
அதிமுகவுடன் தேமுதிக சேர்ந்தால் பாமகவுக்கு மிகக் குறைவான இடங்களே கிடைக்கும் என்பதை ராமதாஸ் உணர்ந்துள்ளார். அதே போல சோனியா காந்தியின் கோபத்தைக் காட்டி திமுக தன்னை கூட்டணியில் சேர்க்காமலேயே விட்டுவிடவும் வாய்ப்புள்ளதையும் அறிந்துள்ளார்.
இதனால் நகத்தை கடித்தபடி இரு கட்சிகளுடனும் பாமக தொடர்பில் இருந்து வருகிறது.
இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்த அன்று நேற்று முன் தினம் தனது கட்சியின் எம்.எல்.ஏக்களுக்கு, டீ பார்ட்டி தந்தார் ராமதாஸ்.
சென்னையில் நடந்த இந்த பார்ட்டியில் இளைஞரணித் தலைவர் அன்புமணியும் பங்கேற்றார்.
அப்போது கூட்டணி தொடர்பாக எம்எல்ஏக்கள் ராமதாசிடம் கவலையுடன் கேள்விகள் எழுப்பியதாகத் தெரிகிறது.
சிலர் திமுக முடிவுக்குக் காத்திராமல் அதிமுகவுடன் இப்போதே கூட்டணி போட்டுவிடலாம் என்றும், ஆனால் பெரும்பான்மையானவர்கள் சில வாரங்கள் காத்திருந்தாலும் திமுக-காங்கிரஸ் கூட்டணியில் சேருவதே நல்லது என்றும் கூறியுள்ளனர்.
இதையடுத்து அவர்கள் மத்தியில் பேசிய ராமதாஸ், கூட்டணி பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம், அதை நான் பார்த்துக் கொள்கிறேன். கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து தேர்தல் வேலையை ஆரம்பியுங்கள் என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications