தர்மபுரி அருகே அண்ணா சிலை உடைப்பு-5 பேர் கைது
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே அறிஞர் அண்ணா சிலையை விஷமிகள் சிலர் உடைத்தனர். இதனால் அங்கு பதட்டம் நிலவுகிறது.
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ளது கம்மாளப்பட்டி. இங்கு தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் முழு உருவ சிலை வைக்கப்பட்டுள்ளது.
சிமெண்ட்டிலான இந்த 7 அடி உயர சிலையின் கண், மூக்கு, கை ஆகிய பாகங்களை நள்ளிரவு நேரத்தில் மர்ம கும்பல் ஒன்று உடைத்து விட்டு, பின்பு அங்கிருந்து தப்பி சென்று விட்டது.
காலை நேரத்தில் இதைக் கண்டு திடுக்கிட்ட திமுகவினர் இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.
இதனையடுத்து, சிலையை உடைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் கருணாநிதி பாப்பாரப்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சிலை உடைப்புக்கு காரணமான வில்லன்ராஜ் (21), மகேஸ்வரன் (19), பழனிசாமி (19), வெற்றிவேல் (21), பழனிசாமி (19) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதட்டம் நிலவுகிறது.












Click it and Unblock the Notifications