சட்டசபைத் தேர்தல் தொகுதிப் பங்கீடு-திமுக, விடுதலைச் சிறுத்தைகள் பேச்சு

அண்ணா அறிவாயலத்தில் நடந்து வரும் பேச்சுவார்த்தைகளில் திமுக சார்பில் துணை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் ஆற்காடு வீராசாமி, பொன்முடி ஆகியோரும், விடுதலை சிறுத்தைகள் சார்பில் அதன் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் எம்எல்ஏ மற்றும், வன்னி அரசு பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைகளின்போது திருமாவளவன் 20 தொகுதிகளைக் கோரியதாகத் தெரிகிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 9 இடங்கள் தரப்பட்டன. இதையடுத்து அதிமுக அணியிலிருந்து இந்தக் கட்சி திமுகவுக்கு மாறிவிட்டது. அதிலிருந்து திமுகவுடன் இணைந்து இரு மக்களவைத் தேர்தல்கள், உள்ளாட்சித் தேர்தல், இடைத் தேர்தல்களை விடுதலைச் சிறுத்தைகள் சந்தித்துள்ளது.
திமுகவுடன் மிகவும் தோழமையாக, திமுகவை மிகத் தீவிரமாக ஆதரிக்கும் கட்சியாக உள்ள விடுதலைச் சிறுத்தைகளுக்கு இந்த முறை முதல்வர் கருணாநிதி 15 இடங்கள் வரை தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இன்றைய ஆலோசனைக்குப் பின் நிருபர்களிடம் பேசிய திருமாவளவன், தொகுதிப் பங்கீடு குறித்து முதல்கட்ட பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. அடுத்தடுத்த கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்படும். திருப்திப்படும் வகையில் எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று நம்புகிறோம் என்றார்.












Click it and Unblock the Notifications