தீர்மானத்தை முன்மொழிய ஜெயந்தி நடராஜன் வராததால் ராஜ்யசபா ஒத்திவைப்பு
டெல்லி: குடியரசுத் தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை முன்மொழிய வேண்டிய, காங்கிரஸ் உறுப்பினர் ஜெயந்தி நடராஜன் வராததால், மதிய உணவு இடைவேளைக்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே ராஜ்யசபாவை ஒத்திவைக்க நேரிட்டது.
இதனால் அரசுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் தர்மசங்கடமாகி விட்டது. ராஜ்யசபாவில் இன்று குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதன் மீது காங்கிரஸ் உறுப்பினர் ஜனார்த்தன் திவிவேதி பேசினார். இதையடுத்து தீர்மானத்தை முன்மொழிந்து பேசுமாறு கூறி ஜெயந்தி நடராஜனை அழைத்தார் துணைத் தலைவர் ரஹ்மான்கான்.
ஆனால், நடராஜன் அப்போது சபையில் இல்லை. இதை சுட்டிக் காட்டிய எதிர்க்கட்சியினர் முன்மொழிந்து பேச வேண்டியவர் வராமல் இருப்பதா என்றும் கேட்டனர்.
இதனால் ஆளும் கட்சி தரப்பு நெளிந்தது. இதைப் பார்த்த ரஹ்மான் கான் மேலும் சர்ச்சை ஆகி விடாமல் தடுக்க ராஜ்யசபாவை ஒத்திவைத்து உத்தரவிட்டார். இந்த சம்பவம் நடந்த பிரதமர் மன்மோகன் சிங் அவையில்தான் இருந்தார்.
இதுகுறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயந்தி நடராஜன், கோத்ரா தீர்ப்பு தொடர்பாக செய்தியாளர்களிடம், காங்கிரஸ் கட்சியின் கருத்தை தெரிவிப்பதற்காக தான் அவையிலிருந்து சிறிது நேரம் வெளியேறியதாகவும், நடந்ததைக் கேள்விப்பட்டு ராஜ்யசபா தலைவரை நேரில் சந்தித்து மன்னிப்பு கேட்டுக் கொண்டதாகவும் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications