திமுக-காங்கிரஸ் விரைவில் தொகுதி பங்கீடு: கார்த்தி சிதம்பரம்

செங்கல்பட்டு மாவட்ட முன்னாள் அதிமுக தொழிற்சங்கச் செயலாளர் ஆதிகேசவர் தலைமையில் நூற்றுக்கணக்கான தொண்டர்கள் காங்கிரசில் இணையும் நிகழ்ச்சி கார்த்தி ப.சிதம்பரம் முன்னிலையில் சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.
அதில் பேசிய கார்த்தி, ஆதிகேசவர் மிகச் சிறந்த தொழிற்சங்கவாதி. அவர் அதிமுகவில் இருந்து காங்கிரசில் இணைந்ததன் மூலம் அடிமட்ட தொண்டர்களின் உணர்வு எப்படி இருக்கிறது என்பது புரிகிறது.
ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஆன பிறகு நியமன பதவிகள் எல்லாம் ரத்து செய்யப்பட்டு இளைஞர் காங்கிரஸ், மாணவர் காங்கிரஸ், ஆகிய அமைப்புகளுக்கு தேர்தல் மூலம் நிர்வாகிகள் நியமிக்கப்படுகின்றனர்.காங்கிரசில் உழைத்தால் பதவிகள் தேடி வரும் என்றார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:
கேள்வி: திமுக-காங்கிரஸ் தொகுதி உடன்பாடு எந்த அளவில் உள்ளது? பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் எற்பட்டு இருக்கிறதா?
பதில்: திமுக-காங்கிரஸ் கூட்டணி வெற்றிக் கூட்டணி. கடந்த 2004,2006,2009ம் ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில் இந்த கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அது 'ஹாட்ரிக்' வெற்றி ஆகும். நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணியே வெற்றி பெறும். இதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வேண்டாம்.
தொகுதி உடன்பாடு பற்றிய முதல் கட்ட பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்றது. திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி. தங்கபாலு கொண்டு சென்றுள்ளார். திமுக சொல்லிய கருத்து சோனியா காந்தியிடமும் தெரிவிக்கப்பட்டு விட்டது. 2வது கட்ட பேச்சில் சமுகமான முடிவு எட்டப்படும்.
கேள்வி: தேமுதிகவுடன் காங்கிரஸ் சேர்ந்து 3வது அணி அமைக்கப்படுமா?
பதில்: அப்படி எதுவும் இல்லை, மூன்றாவது அணி அமைவதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications