பிரியாணி, மது, பணத்துக்காக ஓட்டுரிமையை இழக்காதீர்: நரேஷ் குப்தா
திருப்பூர்: பிரியாணி, மது, பணம் போன்றவை கிடைக்கிறதே என்று மக்கள் தங்கள் ஓட்டுரிமையை இழந்து விடக்கூடாது என்று தமிழக முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கம் சார்பில் திருப்பூரில் கண்ணியமான தேர்தல் -2011 என்ற தலைப்பில், வாக்காளர் விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. இதற்கு அந்த இயக்கத்தின் மாநில துணை தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.
இதில் கலந்து கொண்டு நரேஷ் குப்தா பேசியதாவது,
வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டால் அதற்கு பதிலாக நகல் அட்டை பெற முடியும். கடந்த ஜனவரி மாதம் 10-ம் தேதி இறுது வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இருப்பினும், அந்த பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் மீண்டும் விண்ணப்பித்து பெயர் சேர்க்க முடியும்.
காந்தி நடந்த பாதையில் தான் தினமும் நடப்பதாக ஒரு படத்தில் கதாநாயகன் நகைச்சுவையாக சொல்வார். அவ்வாறு காந்தியத்தை பின்பற்றாமல் அவரது கொள்கைகளை பின்பற்றற வேண்டும். காந்தியிடம் உண்மை, அகிம்சை என்ற இரு சக்தி வாய்ந்த ஆயுதங்கள் இருந்தன.
கடந்த 1920-ம் ஆண்டில் 'யங் இந்தியா' பத்திரிகையில் தேர்தலில் ஒருவர் போட்டியிடும் போது, முதலில் அவரது நேர்மையை மட்டுமே பார்க்க வேண்டும் என காந்தி குறிப்பிட்டிருந்தார்.
வேட்பாளரின் கட்சி, கொள்கை, வாக்குறுதி, நோக்கம் முக்கியமன்று, அவர் நேர்மையானவரா என்று தான் மக்கள் பார்க்க வேண்டும். எம்.பி., எம்.எல்.ஏ.,க்களின் முந்தைய சொத்து விவரம், பதவியில் இருக்கும் போது சொத்து விவரங்கள் பத்திரிகைகளில் வருகின்றன.
தேர்தல் விதிமுறைகளில் பேனர், போஸ்டர் குறித்த புகார்களை தெரிவிக்கும் மக்கள், பிரியாணி, மது மற்றும் பணம் தருவது குறித்த புகார்களை தெரிவிக்க முன்வருவது இல்லை. பிரியாணி, மது, பணம் போன்றவை கிடைக்கிறதே என்று மக்கள் தங்கள் ஓட்டுரிமையை இழந்து விடக்கூடாது.
இப்படி ஒரு கொள்கையை வலியுறுத்தி, காந்திய மக்கள் இயக்கம் மக்களை திரட்டி சத்யாகிரகத்தில் ஈடுபட வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications