மத்திய பட்ஜெட்டில் மக்கள் பிரச்சினைக்குத் தீர்வு இல்லை-ஜெ.

Subscribe to Oneindia Tamil

சென்னை: மக்களின் முக்கியமான பல்வேறு பிரச்சினைகளைத் தீர்க்கும் எந்த ஒரு அம்சமும் பட்ஜெட்டில் இல்லை என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

மத்திய பட்ஜெட் குறித்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

நாட்டில் உணவு பணவீக்கம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது. பெட்ரோலிய எரிபொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நாட்டின் பொருளாதாரம் கறுப்பு பண ஆதிக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. ஊழல் மலிந்து விட்டது. உள்நாட்டு தீவிரவாதம் மற்றும் அண்டை நாடுகளால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இந்தப் பிரச்னைகளைத் தீர்க்கும் வகையில் பட்ஜெட்டில் அறிவிப்புகள் வரும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் மக்களின் எதிர்பார்ப்புகளை பொய்யாக்கும் வகையில், நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்துள்ளார்.

உணவு பணவீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கு உதவும் வகையில் பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை. ஊழலை எதிர்க்க அனைவரும் ஒன்று சேர்ந்து போராட வேண்டும் என்று நிதியமைச்சர் கூறியிருப்பதன் மூலம், ஊழலை ஒழிப்பதில் மத்திய அரசு தனது கடமையைத் தட்டிக் கழிப்பது தெளிவாகிறது.

கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்கான ஐந்து அம்ச திட்டங்களை முன் வைக்கும் பிரணாப் முகர்ஜி, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள பல லட்சம் கோடி கறுப்புப் பணத்தை இந்தியாவுக்கு மீட்டு கொண்டு வருவது பற்றி எதுவும் கூறவில்லை.

சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கான கடன் அதிகரிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ள போதிலும், நடுத்தர மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைப்பதற்கான கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன.

வருமான வரி செலுத்துவதற்கான வருவாய் உச்சவரம்பு ரூ.1 லட்சத்து 60 ஆயிரத்திலிருந்து, ரூ.1 லட்சத்து 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளதே தவிர, பெண்களுக்கான வருவாய் உச்ச வரம்பு உயர்த்தப்படவில்லை. மாதச் சம்பளம் பெறும் மக்களுக்கான வருமான வரி உச்சவரம்பு ரூ.5 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும் என்பதே அ.தி.மு.க.வின் நிலைப்பாடு ஆகும்.

அங்கன்வாடி பணியாளர்களுக்கான ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதும், சலுகைகளைப் பெறுவதற்கான மூத்த குடிமக்களுக்கான வயது வரம்பு 65-ல் இருந்து 60 ஆகக் குறைக்கப்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கது. எனினும் சேவை வரிகளின் காரணமாக மூத்தக் குடிமக்களுக்கான மருத்துவ சேவை மற்றும் மருத்துவக் காப்பீடு ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும். நிதியமைச்சர் தனது இடது கையால் சில சலுகைகளை அளித்துவிட்டு, அவற்றை தனது வலது கையால் மீண்டும் எடுத்துக் கொண்டுள்ளார்.

உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைக் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா துறையில் பெரும் பாதிப்பு ஏற்படும். மின் உற்பத்தியை அதிகரிக்க எந்தத் திட்டமும் இல்லை. வேலையில்லாத் திண்டாட்டப் பிரச்னை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படவேயில்லை.

பொதுத் துறை நிறுவனப் பங்குகளை விற்பனை செய்வது, வெளிநாட்டு நேரடி முதலீடுகளை மேலும் தாராளமாக அனுமதிப்பது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது. இந்த சலுகைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதோடு, இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கெனவே கடும் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளன. எனினும், மக்களின் உணர்வுகளுக்கு மாறாக மத்திய அரசு செயல்படுகிறது.

மொத்தத்தில், நாட்டு மக்களின் முக்கியமான பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்த பட்ஜெட் அறிவிப்பில் எதுவும் இல்லை. ஒரு சிறு பகுதி மக்களின் நலன்களுக்கான திட்டங்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டால், நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+