சட்டசபைத் தேர்தல் தேதியை மாற்ற சிபிஎம், பாஜக கோரிக்கை

இதுகுறித்து அக்கட்சி கூறுகையில், தமிழகம், புதுச்சேரி, கேரளாவில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்துவது என்ற தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை பாராட்டுக்குரியது, வரவேற்புக்குரியது.
அதேசமயம், தமிழகத்தில் பத்தாவது மற்றும் பிளஸ்டூ தேர்வுகள் நடைபெறும் சமயத்தில் தேர்தலை வைத்திருப்பது சரியல்ல. மாணவர்களின் படிப்பும், தேர்வு குறித்த கவனமும், தேர்தல் பிரசாரத்தால் திசை திரும்பி கடுமையாக பாதிக்கப்படும்.
எனவே மாணவர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தேர்தலை நடத்தாமல் வேறு தேதியில் நடத்த முன்வர வேண்டும் என்று அக்கட்சி கோரியுள்ளது.
தமிழ்ப் புத்தாண்டு-தேதியை மாற்ற பாஜக கோரிக்கை:
இதேபோல பாஜகவும் தேர்தல் அட்டவணையை மாற்றக் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில்,
தமிழக தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 13ந் தேதி நடக்க இருப்பதாக வந்துள்ள தேர்தல் ஆணையத்தின் அறிக்கை தமிழக மக்களின் மன உயர்வை புரிந்து கொள்ளாமல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் தமிழ் புத்தாண்டு ஏப்ரல் 14ந் தேதி அதாவது சித்திரை 1ந் தேதி வர உள்ளது. தமிழக அரசு தமிழ் புத்தாண்டு தினத்தை தை 1ந் தேதிக்கு அரசின் அறிக்கை மூலம் மாற்றி இருந்தாலும் இன்றும் தமிழக மக்கள் சித்திரை ஒன்றையே தமிழ் புத்தாண்டாக கொண்டாடி வருகிறார்கள்.
எனவே தமிழ் புத்தாண்டிற்கான முன் தயாரிப்புகள் சில நாட்களுக்கு முன்பே துவக்குவார்கள். தமிழக மக்களின் உணர்வோடு கலந்துவிட்ட இந்த புத்தாண்டிற்காக வீடுகளை தயார்படுத்தவும் வழி பாட்டுத்தலங்களை தயார் படுத்துவதிலும் மும்முரமாக இருக்கும் ஏப்ரல் 13ந் தேதி தமிழக சட்டசபை தேர்தல் சித்திரை விழாவை சீர்குலைக்கும் செயல் என்று கருதுகிறேன்.
தேர்தல் ஆணையத்தின் அறிக்கைப்படி ஏப்ரல் 13ந் தேதி நடக்கும் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை மே 13ந் தேதி வைத்துள்ளது. வாக்குப்பதிவு எந்திரத்தை ஒருமாத காலம் காக்க வேண்டிய கட்டாயத்தை உருவாக்கி உளளது. இந்த கால இடைவெளி தவறுகள் நடப்பதற்கு அதிக வாய்ப்பை உருவாக்கும். தேர்தல் பிரசார ஒலி பெருக்கிகளும் பிரச்சனை தரும் மாணவர்களின் கவனத்தை படிப்பில் இருந்து திசை திருப்பும்.
மேலும் மாணவர்களின் ஆண்டு இறுதித் தேர்வை அது மிகவும் பாதிக்கும் என்பதையும் அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையரும் மனதில் கொள்ள வேண்டும். எனவே தற்போது அறிவிக்கப்பட்ட தேர்தல் அட்டவணையை மாற்றி மே மாதத்தில் தேர்தல் நடக்கும் வகையில் அட்டவணையை மாற்றி அறிவிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட்டும் எதிர்ப்பு:
இதேபோல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தல் தேதிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து கட்சியின்மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறுகையில், பொதுத் தேர்வும், பொதுத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடப்பது ஏற்புடையதல்ல. தேர்வு நடைபெறும் சமயத்தில் தேர்தல் நடைபெற்றால் மாணவர்கள் பாதிக்கப்படுவர். இதுகுறித்து தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வோம் என்று தெரிவித்துள்ளார்.
அதிமுக கூட்டணிக்கு அச்சம்?
அதிமுக கூட்டணியைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், அதிமுக கூட்டணியில் முன்பு இருந்து, இப்போது தீவிரமாக அதை எதிர்க்காத பாஜகவும், தேர்தல் தேதி குறித்து அதிருப்தி எழுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைபெறும் நாளுக்கும், வாக்கு எண்ணிக்கை நாளுக்கும் இடையே ஒரு மாத கால இடைவெளி இருப்பதால் அதிமுக கூட்டணி அச்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. எனவேதான் தற்போதைய ஏப்ரல் 13ம் தேதிக்குப் பதில் மே மாதத்தில் தேர்தல் நடத்த இவை அடி போடுவதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications