திமுக, காங்கிரல் தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் தீரும்-திருமா. நம்பிக்கை
சென்னை: திமுக, காங்கிரஸ் இடையிலான தொகுதிப் பங்கீட்டுச் சிக்கல் சுமூகமான தீர்வை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் எதிரே நடந்த கட்சியின் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது கூறுகையில், தி.மு.க. காங்கிரஸ் தொகுதி உடன்பாடு நிச்சயாக ஏற்படும் என்று நம்பிக்கை இருக்கிறது என்றார். ஒருவேளை காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு ஏற்படாவிட்டால் நீங்கள் கூடுதல் இடம் கேட்பீர்களா என்று செய்தியாளர்கள் கேட்டபோது இதையே மீண்டும் வலியுறுத்திப் பேசினார் திருமாவளவன்.
கடந்த தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 9 இடங்களைப் பெற்றது. இந்த முறை திமுக கூட்டணியில் 10 இடங்கள் வாங்கியுள்ளது. ஆனால் அது 15 தொகுதிகளை கேட்டு வந்தது என்பது நினைவிருக்கலாம். கூட்டணியில் பிரச்சினை வரக் கூடாது என்பதற்காக இதைப் பெற்றுக் கொள்கிறோம் என்று அப்போது கூறினார் திருமாவளவன். இந்த நிலையில் ஒருவேளை காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியிலிருந்து விலகினால், திருமா கட்சிக்கு கூடுதல் இடங்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.