போபர்ஸ் பீரங்கி ஊழல்-குவாத்ரோச்சி மீதான வழக்கை மூட சிபிஐக்கு கோர்ட் அனுமதி

இப்போது எப்படி ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டையே உலுக்கியதோ, இதை விட பலமாக 80களில் நாட்டை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியது போபர்ஸ் பீரங்கி பேர ஊழல். ராணுவத்திற்கு போபர்ஸ் பீரங்கிகளை வாங்கியதில் இடைத்தரகராக செயல்பட்டவர் இந்த குவாத்ரோச்சி. இதன் மூலம் இவர் பெரும் பணத்தை லஞ்சமாக பெற்றார். மேலும், அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி உள்ளிட்டோரும் பெரும் லஞ்சம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்து அவர்கள் மீது பின்னர் வழக்கு தொடரப்பட்டது. போபர்ஸ் ஊழல்தான் ராஜீவ் காந்திக்கு எதிராக நாட்டு மக்களிடையே பெரும் எதிர்ப்பலை உருவாக காரணம். இதன் தொடர்ச்சியாக காங்கிரஸ் அரசு தேர்தலில் படு தோல்வியைத் தழுவியது.
இந்த வழக்கில் சிக்கிய குவாத்ரோச்சியை நாடு கடத்தி இந்தியாவுக்குக் கொண்டு வர சிபிஐ முயன்று வந்தது. ஆனால் இத்தனை காலமாகியும் அவரைக் கொண்டு வர முடியவில்லை. இதையடுத்து குவாத்ரோச்சி மீதான வழக்கை கைவிட சிபிஐ முடிவு செய்தது.
இதையடுத்து டெல்லி தலைமை மெட்ரோபாலியன் கோர்ட்டில் சிபிஐ மனு தாக்கல் செய்தது. அதில் குவாத்ரோச்சி மீதான வழக்கை மூட அனுமதி அளிக்குமாறு கோரியிருந்தது.
இதை விசாரித்த டெல்லி கோர்ட் இன்று, குவாத்ரோச்சி மீதான வழக்கை முடிவுக்குக் கொண்டு வர அனுமதி அளித்தது. குவாத்ரோச்சியை மீட்கும் பணிக்காக இதுவரை ரூ. 250 கோடி அளவுக்கு மக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டுள்ளதை தாங்கள் மிகவும் கவலையுடன் கவனத்தில் கொண்டதாகவும், இதை மனதில் கொண்டே வழக்கை மூட அனுமதி அளிப்பதாக நீதிபதி வினோத் யாதவ் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications