திமுக, தேமுதிக, வி.சியில் விருப்ப மனு தாக்கல் தீவிரம்
சென்னை: சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தோரின் எண்ணிக்கை 9,000த்தைத் தாண்டியுள்ளது. அதே போல தேமுதிகவிலும் 2,600 பேர் மனு கொடுத்துள்ளனர். அதிமுகவில் 10,553 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுகவில் விருப்ப மனு தாக்கல் செய்வது முடிந்துவிட்டது. திமுகவில் விருப்ப மனுவை தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், இன்று அக் கட்சியின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திமுகவில் கடந்த மாதம் 25ம் தேதி முதல் அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனு பெறப்பட்டு வருகின்றன. மார்ச் 7ம் தேதி வரை விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் விருப்ப மனுக்கள் பெறுவது மார்ச் 5ம் தேதியுடன் முடிக்கப்பட்டு, 8ம் தேதி முதல் மனு கொடுத்தவர்களிடம் நேர்காணல் துவங்கப்படும் என திமுக அறிவித்துள்ளது.
இன்று காலை வரை சுமார் 9,000 பேர் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர்.
அமைச்சர்கள் கே.என்.நேரு (லால்குடி, திருச்சி மேற்கு), பூங்கோதை (ஆலங்குளம்), செல்வராஜ் (மணச்சநல்லுர், முசிறி), முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் (திருச்செந்தூர்), முன்னாள் எம்.எல்.ஏ. செங்கை சிவம் (திரு.வி.க. நகர்), ஆலந்தூர் பாரதி (ஆலந்தூர்), பூச்சி முருகன் (மயிலாப்பூர்), கல்யாணசுந்தரம் (விருகம்பாக்கம்) ஆகியோர் நேற்று மனு கொடுத்தனர்.
விருப்ப மனு கொடுக்க நாளை கடைசி நாள். எனவே வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் இன்று கார், வேன்களில் சென்னை அறிவாலயத்தில் வந்து குவிந்தனர். ஏராளமானோர் வந்து குவிந்ததால் அறிவாலய வளாகமே திருவிழா கூட்டம் போல் காட்சி அளித்தது. அறிவாலயத்தின் முன் பகுதியிலும் ஏராளமான வாகனங்களும், தொண்டர்களும் நின்றதால் பஸ் மற்றும் வாகனங்கள் மெதுவாகவே செல்ல முடிந்தன.
அமைச்சர்கள் கீதா ஜீவன் (தூத்துக்குடி), பெரியகருப்பன் (திருப்பத்தூர்), கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் (அருப்புக்கோட்டை), தங்கம் தென்னரசு (திருச்சுழி), முன்னாள் மத்திய மந்திரி ராதிகாசெல்வி (திருச்செந்தூர்), மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு (புதுக்கோட்டை), முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி (அரவக்குறிச்சி), வக்கீல் மகேஷ் (நாகர்கோவில்), பாண்டிச்செல்வம் (ராயபுரம்), மகேஷ்குமார் (சைதாப்பேட்டை), கவுன் சிலர் தனசேகரன் (விருகம்பாக்கம்), கவுன்சிலர் புவனேஸ்வரி-சங்கரலிங்கம் (பெரம்பூர், மாதவரம்) ஆகியோர் இன்று மனு கொடுத்தனர்.
தேமுதிக விருப்ப மனு..
இந் நிலையில் தேமுதிக சார்பில் போட்டியிட சுமார் 10,000 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தேமுதிக இளைஞரணித் தலைவரும் விஜய்காந்தின் மச்சானுமான சுதீஷ் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், தலைவர் விஜயகாந்த் 2ம் தேதி முதல் விருப்ப மனுவை அளிக்கலாம் என்று அறிவித்திருந்தார். அன்று மட்டும் ஆயிரத்து நூறு மனுக்கள் கொடுக்கப்பட்டன. நேற்று சுமார் 500 மனுக்கள் கொடுக்கப்பட்டன. மூன்றாம் நாளான இன்று 2 ஆயிரம் மனுக்களை கொடுத்துள்ளோம். இன்று மாலைக்குள் 4 ஆயிரம் மனுக்களை விநியோகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் தலைவர் விஜயகாந்த் போட்டியிட வேண்டும் என்று மனுக்கள் கொடுத்துள்ளனர். வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்குள் கிட்டதட்ட 10 ஆயிரம் மனுக்கள் தாக்கலாகும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.
திருமாவளவனிடம் வன்னியரசு விருப்ப மனு:
அதே போல விடுதலைச் சிறுத்தைகள் கட்சியிலும் விருப்ப மனுக்கள் சமர்பி்க்கப்பட்டு வருகின்றன.
மதுராந்தகம் அல்லது செய்யூரில் போட்டியிட அக் கட்சியின் மாநில செய்தித் தொடர்பாளர் வன்னி அரசு சார்பில் இன்று திருமாவளவனிடம் மனு அளித்தார்.
அதிமுகவில் 12,268 விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து மட்டும் 1,503 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.