தென்மாவட்ட தொகுதிகள் மீது குறி வைத்துள்ள தேமுதிக
நெல்லை: சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தென்மாவட்டங்களில் முக்கிய தொகுதிகளை குறி வைத்து கேட்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப் 13ம் தேதி நடக்கிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடு குறித்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.
அதி்முக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிகவுக்கு 41 தொகுதிகள் ஓதுக்கப்பட்டுள்ளன. இதில் தங்களுக்கு வெற்றி கிடைக்கும் தொகுதிகள் எவை, எவை என நிர்வாகிகளிடம் கட்சி மேலிடம் கேட்டுள்ளது.
இதையடுத்து தென்மாவட்டங்களில் 2006 சட்டமன்ற தேர்தலிலும், 2009 நாடாளுமன்ற தேர்தலிலும் அதிக வாக்குகள் பெற்ற தொகுதி கண்டறியப்பட்டுள்ளது.
அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் சிவகாசியும், நெல்லை மாவட்டத்தில் ஆலங்குளம், கடையநல்லூர், ராதாபுரம், தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, ஸ்ரீவைகுண்டம், குமரி மாவட்டத்தில் கன்னியாகு்மரி என 7 தொகுதிகளை வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளாக தேமுதிக குறி வைத்துள்ளது.
இதில் சிவகாசி தொகுதி தற்போது மதிமுக வசமும், கோவில்பட்டி தொகுதி அதி்முக கைவசமும், உள்ளன. கடையநல்லூர், ஸ்ரீவைகுண்டம், ஆலங்குளம், ராதாபுரம், கன்னியாகுமரி ஆகிய தொகுதிகள் ஏற்கனவே 2006ல் அதிமுக போட்டியிட்ட தொகுதிகளாகும்.
ஆனால் இந்தத் தொகுதிகளை அதிமுகவிடம் கேட்கவுள்ளது தேமுதிக. ஆனால் இதை அதிமுக ஒதுக்குமா என்பது தெரியவில்லை.