காங்கிரஸால் தள்ளிப் போன பாமக, வி.சி தொகுதிகள் ஒதுக்கீடு
சென்னை: காங்கிரஸ் கட்சியின் கோரிக்கைகள் குறித்து முதல்வர் கருணாநிதி இறுதி முடிவெடுப்பார். அந்த முடிவு அனைவருக்கும் பொருத்தமானதாக இருக்கும் என நம்புகிறோம் என்று பாமக கூறியுள்ளது.
நேற்று இரவு திமுக தொகுதிப் பங்கீட்டுக் குழுவினருடன் ஜி.கே.மணி தலைமையிலான குழுவினர் சந்தித்துப் பேசினர். அப்போது தங்களது விருப்பத் தொகுதிப் பட்டியலை பாமக கொடுத்தது.
பின்னர் முதல்வர் கருணாநிதியையும் பாமக குழுவினர் சந்தித்துப் பேசினர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜி.கே.மணி பேசுகையில்,
திமுக தலைமையிலான வெற்றி கூட்டணியில் இடம் பெற்றிருக்கிற பாமக தொகுதி பங்கீட்டுக்கான பேச்சுவார்த்தையை நடத்தியது. இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை சுமூகமாக நடந்தது. இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும் வகையில், பேச்சுவார்த்தை நடந்துள்ளது. மிக விரைவில் இறுதிப் பட்டியல் தயாராகி வெளியிடப்படும்.
காங்கிரஸ் மீண்டும் பரிசீலனை செய்யக்கோரி முதல்வரிடம் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதனை முதல்வர் மறுபரிசீலனை செய்துக்கொண்டு இருக்கிறார். இறுதி முடிவு எடுப்பார் என்று நம்புகிறோம். அனைவருக்கும் பொருத்தமானதாக அது இருக்கும் என்று நம்புவோம் என்றார்.
காங்கிரஸ் கட்சி தொடர்ந்து 63 தொகுதிகள் என்ற நிலையில் பிடிவாதமாக இருப்பதால், பாமகவிடமிருந்து 3 தொகுதிகளைப் பெற்று தனது பங்குக்கு 60ஐச் சேர்த்து 63 தொகுதிகளாக கொடுக்க திமுக திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுடன் நடந்து வரும் இந்த கடைசி முயற்சிகளின் காரணமாக, நேற்று இரவே அறிவிக்கப்பட்டிருக்க வேண்டிய பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீட்டை திமுக தள்ளிப் போட்டது.