கேரளாவிருந்து இறக்குமதியான ரூ 10 கோடி தேங்காயை கடலில் கொட்டிய இலங்கை!
கொழும்பு: பத்துக் கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமானமுள்ள தேங்காய்களை இலங்கை அரசு கடலில் கொட்டி அழித்தது.
இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் தேங்காய்க்குத் தட்டுப்பாடு நிலவியது. அப்போது கேரளாவிலிருந்து பெருமளவில் தேங்காயை இறக்குமதி செய்திருந்தது இலங்கை. நாற்பது இலட்சம் தேங்காய்கள் இரண்டு கப்பல்கள் மூலம் கொழும்பு வந்து சேர்ந்து.
ஒரு தேங்காயை இறக்குமதி செய்வதற்கு 26.60 ரூபா (ரூபா என்பது இலங்கைப் பணம்) வரை செலவிட்டிருந்தது அந்நாட்டு அரசு. மொத்தம்1050 இலட்சம் ரூபா அதாவது பத்து கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருந்தது.
ஆயினும் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக கொழும்புத் துறைமுகத்தில் தேக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் அவை கெட்டுப் போயிருந்தன. அதன் காரணமாக நாற்பது இலட்சம் தேங்காய்களும் சில தினங்களுக்கு முன் கடலில் கொட்டப்பட்டன.
இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய்களை நாட்டுக்குள் கொண்டு வர விடாமல் தடுத்தவர் விவசாயத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன என தெரியவந்துள்ளது. விதை மற்றும் தாவர பாதுகாப்பு சட்டத்தைப் பயன்படுத்தியே அவர் அதனைத் தடுத்திருந்தார்.
அதன் மூலம் நாட்டில் தேங்காய் விலை கண்டபடி அதிகரித்திருப்பதுடன், இறக்குமதி செய்யப்பட்ட பெருமளவு தேங்காய்களையும் கடலில் கொட்ட நோ்ந்துள்ளது. பொதுமக்களின் பணத்தை வீணடிக்கும் செயல் இது என்று எதிர்க்கட்சிகளும் பத்திரிகைகளும் விமர்சித்துள்ளன.
இவ்வாறு தேங்காய் இறக்குமதியைத் தடுப்பதற்கு அமைச்சர் சந்திரசேன இலங்கையின் பெரும் தென்னந்தோப்பு உரிமையாளர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டதாக சக அமைச்சர் ஒருவரே குற்றம்சாட்டியுள்ளார்.












Click it and Unblock the Notifications