தமிழக தேர்தல் தேதியை தள்ளி வைக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளைக் கருத்தில் கொண்டு சட்டப் பேரவைத் தேர்தலைத் தள்ளி வைக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் திண்டிவனத்தைச் சேர்ந்த குரு அப்பாசாமி, மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சிவ இளங்கோ ஆகியோர் தனித் தனி ரிட் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த இரு மனுக்களும் தலைமை நீதிபதி எம்.ஒய். இக்பால், நீதிபதி டி.எஸ். சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபாலன் ரிட் மனுக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் வாதாடுகையில், பாதுகாப்பை கருத்தில் கொண்டே தேர்தல் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்தலை தள்ளி வைத்தால் பிரச்சனை ஏற்படும். மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அதில் நீதமன்றம் தலையிட இயலாது. தேர்தலை தள்ளி வைக்க கோரும் மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், நேற்று தீர்ப்பை ஒத்தி வைத்து இன்று தீர்ப்பளித்தனர்.
நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில், பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி, மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட பள்ளித் தேர்வுகள் அனைத்தும் முடிந்த பிறகு தான் சட்டசபை தேர்தல் நடக்கிறது. எனவே தேர்தல் தேதியை தள்ளி வைக்க வேண்டும் என்பதில் நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை. என்றாலும் தேர்வு எழுதும் பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி 4 நிபந்தனைகளை இந்த கோர்ட் விதிக்கிறது. அதன்படி,
1. தற்போது நடந்து வரும் பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி தேர்வு பணிகளில் ஈடுபட்டுள்ள பள்ளி ஆசிரியர்களை மற்றும் பள்ளி பணியாட்களை எந்த காரணத்தைக் கொண்டும் தேர்தல் பணிகளுக்கோ அல்லது தேர்தல் தொடர்பான பயிற்சிகளுக்கோ தேர்தல் ஆணையம் பயன்படுத்தக் கூடாது. தேர்வுகள் அனைத்தும் நடைபெற்று முடியும் வரை பள்ளி ஆசிரியர்கள், பணியாட்களை தேர்தல் பணி என்ற பெயரில் தொல்லை செய்யக் கூடாது.
2. பள்ளிக் கூட வாகனங்களை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது.
3. ஆண்டு இறுதித் தேர்வு நடைபெறும் மையங்களுக்கு சென்று வரும் அரசு வாகனங்களையோ அல்லது கல்வி நிறுவனங்களின் வாகனங்களையோ தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது.
4. தேர்வு எழுதும் மாணவ-மாணவியருக்கு அமைதியான சூழ்நிலை அவசியம். எனவே தேர்வு நடக்கும் மையங்களில் இருந்து 200 மீட்டர் சுற்றளவுக்கு எந்த அரசியல் கட்சியும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடக் கூடாது. தேர்வு மையம் பகுதிகளில் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணிகளிலும் ஈடுபடக் கூடாது.
இந்த 4 நிபந்தனைகளையும் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கண்டிப்புடன் செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டனர்.
முன்னதாக தேர்தல் தேதியை தள்ளி வைக்க இயலாது என்றும், 5 மாநில நிலவரத்தைக் கருத்தில் கொண்டே தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்டதாகவும் உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications