திமுக கூட்டணிக்கு ஆதரவாக தீவிரப் பிரசாரம்-அரவாணிகள் அறிவிப்பு
சென்னை: சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்காக பாடுபடப் போவதாக தமிழ்நாடு அரவாணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு அரவாணிகள் சங்க உறுப்பினர்கள் அதன் தலைவர் பிரியா பாபு உள்ளிட்டோர் அண்ணா அறிவாலயம் சென்று துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர். அப்போது அவரிடம், தங்களது ஆதரவை திமுக கூட்டணிக்குத் தெரிவித்தனர்.
பின்னர் பிரியா பாபு செய்தியாளர்களிடம் பேசுகையில்,
துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை நாங்கள் சந்தித்து வருகிற சட்டசபை தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவளிப்பதாக கூறி இருக்கிறோம். தமிழ்நாட்டில் 3 லட்சம் அரவாணிகள் இருக்கிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் எங்களுக்கு மரியாதை கிடைத்தது. அரவாணிகள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது.ரேஷன் கார்டு கொடுத்து இருக்கிறார்கள்.வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
கலைஞர் காப்பீட்டு திட்டத்தில் எங்களை சேர்த்திருக்கிறார்கள். இலவச அறுவை சிகிச்சைக்கும் அரசு உதவுகிறது. பல்வேறு நலத்திட்டங்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறது. எனவே இந்த தேர்தலில் தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் பிரசாரம் செய்ய முடிவு செய்திருக்கிறோம். துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் தொகுதியில் இருந்து எங்கள் பிரசாரத்தை தொடங்குவோம் என்றார் அவர்.
சமீபத்தில் அரவாணிகள் நல வாரியம் தொடங்கப்பட்ட நாள் திருநங்கையர் தினமாக கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications