கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு
கோபாலபுரத்தில் உள்ள முதல்வரின் இல்லத்தில் இந்தச் சந்திப்பின்போது பாமக தலைவர் ஜி.கே.மணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, காடுவெட்டி குரு ஆகியோர் உடன் இருந்தனர்.
பாமகவுக்கான 30 தொகுதிகளை அடையாளம் காண்பது தொடர்பாக இச் சந்திப்பு நடந்தது. ஏற்கனவே திமுக குழுவுடன் பாமக பேச்சு நடத்தி பெரும்பான்மையான இடங்களை முடிவு செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ நுழைவு தேர்வு-பாமக போராட்டம் ரத்து:
இந் நிலையில் மருத்துவப் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தக் கூடாது என்று வலியுறுத்தி பாமக சார்பில் அறிவித்திருந்த தொடர் முழக்கப் போராட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
மருத்துவ படிப்புகளில் சேர நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு நடத்த இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கடந்த 4 கல்வியாண்டுகளாக நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.
நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான கிராமப்புற, ஏழை, எளிய மற்றும் மிகவும் பின்தங்கிய மாணவர்களும் தொழில் கல்வியில் சேர்ந்து பயன்பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மருத்துவ படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படமாட்டாது என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இந்திய மருத்துவக் கவுன்சிலின் இந்த முயற்சிக்கு உயர் நீதிமன்றத்தில் தடையாணை பெற்றுள்ளதாக தமிழக அரசு சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
அரசின் இந்த விளக்கத்தை ஏற்று சென்னையில் தமிழ்நாடு மாணவர் சங்கம் சார்பில் மார்ச் 11-ம் தேதியும், எனது தலைமையில் மார்ச் 14-ம் தேதியும் நடக்கவிருந்த போராட்டங்கள் ரத்து செய்யப்படுகின்றன என்று அதில் கூறப்பட்டுள்ளது.