சட்டசபை தேர்தல்: நாகர்கோவிலில் ரஜினி மன்ற நிர்வாகி போட்டி
குமரி: வரும் சட்டசபை தேர்தலில் ரஜினிகாந்த் ரசிகர் மன்ற நிர்வாகி நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுகிறார்.
தேர்தல் வரும்போதெல்லாம் ரஜினி ஆதரவு யாருக்கு என்பது அவரது கோடிக்கணக்கான ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பு மட்டுமல்ல அரசியல் கட்சியினரின் எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் 13-ம் தேதி நடக்கிறது. இந்நிலையில் இம்முறை ரஜினியின் நிலை என்ன என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாய் இருக்கின்றனர். இது ஒருபுறம் இருக்க ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் குமரி மாவட்ட இளைஞரணி தலைவர் கலுக்குடி சதிஷ்பாபு நாகர்கோவில் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது,
கடந்த தேர்தல்களில் தலைவர் பிற கட்சிகளுக்கு ஆதரவு கரம் நீட்டி எங்களை அவர்கள் வெற்றிக்கு பாடுபடுமாறு கூறினார். அதே போல் நாங்களும் அவர்களுக்காக உழைத்தோம். ஆனால் அவர்கள் எங்களை தேவைக்கு மட்டும் பயன்படுத்தினார்கள். இதனால் எங்கள் மன்ற உறுப்பினர்களுக்கு அரசியல் ஆர்வம் இல்லாமல் போய்விட்டது.
நாங்கள் பல வருடங்களாக மாற்று கட்சியினர் பின்னால் போகவே முடிந்தது. இதனால் எங்கள் சுயமரியாதையை நிலைநாட்டவும், மாவட்டத்தில் உள்ள ரஜினி ரசிகர்களுக்கும், ஏழை எளிய மக்களுக்கும் நல்லதொரு நிர்வாகம் அமைப்பதற்காக ரசிகர்களின் விருப்பதுக்காகவும், நான் நாகர்கோவில் தொகுதியில் போட்டியிட உள்ளேன்.
ரஜினி ரசிகர்கள், இளம் பெண்கள் மற்றும் மாணவர்கள் எனக்கு உறுதுணையாக இருப்பதாக கூறியள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications