16ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல்-19ம் தேதி தேர்தல் அறிக்கை வெளியீடு

இதுகுறித்து இன்று திமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
முதல்வர் கருணாநிதி திமுக சார்பில் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை மாலை 5 மணிக்கு வெளியிடுவார்.
18ம் தேதி கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கலந்துரையாடல் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது.
19ம் தேதி திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும். முதல்வர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிடுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் மாதம் 13ம் தேதி நடக்கும் தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான மனு தாக்கல் வரும் 19ம் தேதி தொடங்குகிறது.
திமுக கூட்டணியில் காங்கிரசுக்கான 63 தொகுதிகளை அடையாளம் காண்பதில் கடும் சிக்கல் நிலவியது. பெரும் மோதல், இழுத்தடிப்புக்குப் பின் அந்தக் கட்சிக்கான தொகுதிகள் இறுதி செய்யப்பட்டுவிட்டன. காங்கிரசுக்கான தொகுதிகளை முடிவு செய்யும் முன்பே பாமக, விடுதலைச் சிறுத்தைகளுக்கான தொகுதிகளை திமுக முடிவு செய்துவிட்டது.
இதனால் காங்கிரசுக்கு கடும் கோபம் தான் என்றாலும் இப்போது வேறு வழியில்லை. இதனால் திமுக ஒதுக்கிய தொகுதிகளை ஏற்கும் நிலைக்கு அந்தக் கட்சி தள்ளப்பட்டு பட்டியலும் தயாராகிவிட்டது.
டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ள இந்தப் பட்டியலுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியாவின் ஒப்புதல் இன்று கிடைக்கும் என்பதால் தொகுதிகள் விவரத்தை முதல்வர் கருணாநிதி இன்றே அறிவிப்பார் என்று தெரிகிறது.
திமுக கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் விவரம்:
திமுக -120 தொகுதிகள்.
காங்கிரஸ் - 63
பாமக - 30
விடுதலைச் சிறுத்தைகள் - 10
கொங்கு நாடு முன்னேற்றக் கழகம் - 7
இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க் - 2
ஸ்ரீதர் வாண்டையாரின் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் -1
பெருந்தலைவர் மக்கள் கட்சி - 1
இதில் இந்திய யூனியன் முஸ்லீ்ம் லீ்க், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகியவை திமுகவின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றன. இதன்படி அதிகாரப்பூர்வமாக திமுக 124 தொகுதிகள் போட்டியிடுகிறது.
சென்னையை விட்டு 'ஓடும்' திமுக:
இந்த முறை அதிகமான கிராமப் புற தொகுதிகள் போட்டியிட முடிவு செய்துள்ள திமுக சென்னையில் காங்கிரஸ் கட்சிக்கு அதிக தொகுதிகளை தர திமுக திட்டமிட்டுள்ளது. அதே போல பாமகவுக்கும் ஓரிரு சென்னை தொகுதிகள் தரப்படவுள்ளன.
படித்தவர்கள் அதிகமுள்ள சென்னையில் ஸ்பெக்ட்ரம் விவகாரம் அதிமுகவுக்கு ஆதரவாக 'ஒர்க்-அவுட்' ஆகும் என்பதால் இந்த முடிவுக்கு திமுக வந்துள்ளதாகத் தெரிகிறது.
இந் நிலையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தவுள்ளார்.
தொகுதிப் பங்கீடு இறுதியாகி விட்டது-கருணாநிதி:
திமுக கூட்டணியில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது இறுதியாகி விட்டது என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் அளித்துள்ள பேட்டியில், திமுக கூட்டணியில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது இறுதியாகி விட்டது. ஓரிரு தொகுதிகள் தவிர மற்றவை குறித்து தீர்வு காணப்பட்டுள்ளது.
சில தொகுதிகளை 2, 3 கட்சிகள் கேட்டதால் அவை குறித்து முடிவு செய்ய தாமதமாகி விட்டது.
நாளை திமுக மாவட்டச் செயலாளர்களுடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளோம் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications