அதிமுக ஆட்சி ஒரு 'மனுதர்ம ஆட்சி'-திராவிடர் கழகம்

திராவிடர் கழக பொதுக் குழு அதன் தலைவர் கி.வீரமணி தலைமையில்
இன்று நடந்தது. அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம்:
தமிழர்களின் நீண்டகால எதிர்பார்ப்புத் திட்டமான சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டம் இதிகாசக் கற்பனைப் பாத்திரமான இராமனைக் காட்டி இராமன் பாலத்தை இடிக்கக் கூடாது என்று கூறி, அறிவியலுக்கு முற்றிலும் முரணான வகையில் நாட்டு மக்களுக்கான மாபெரும் ஒரு வளர்ச்சித் திட்டத்தை நீதிமன்றம் மூலம் முடக்கியிருப்பதற்கு இப்பொதுக்குழு தன் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.
சேது திட்டத்தை ஆதரித்துவிட்டு எதிர்த்த ஜெ:
தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத்தார் நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் இத்திட்டத்தை அண்ணா பெயரைச் சொல்லிக் கொண்டும், இனம் மற்றும் கலாச்சாரம் இவற்றைச் சுட்டும் திராவிட என்னும் பெயரை முத்திரையாகப் பயன்படுத்திக் கொண்டும், இன்னொரு பக்கத்தில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா மற்றும் திராவிட இயக்கத்திற்கு எதிராகவும், 2001ம் ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தலில் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை அதிமுக தன் தேர்தல் அறிக்கை பக்கம் 83,84 ஆகிய பக்கங்களில் வெளியிட்டு வலியுறுத்தியிருந்ததற்கு முற்றிலும் முரணாகவும், நேர் எதிராகவும் அரசியல் நோக்கத்தோடும், மூடநம்பிக்கை அடிப்படையில் இராமன் பெயரைப் பயன்படுத்தியும் சேது சமுத்திரக் கால்வாய்த் திட்டத்தை செயல்படுத்திடக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் அதிமுக பொதுச் செயலாளர்
ஜெயலலிதா வழக்குத் தொடுத்திருப்பதை தமிழ் நாட்டு மக்கள் குறிப்பாக தென் மாவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் மிகச் சரியாக அடையாளங் கண்டு,
நடக்க இருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்யும் அதிமுகவுக்கும், அதனோடு கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் கட்சிகளுக்கும் தக்கவகையில் தோல்வியை அளிக்க வேண்டும் என்று இப்பொதுக் குழு தமிழர்களைக் கேட்டுக் கொள்கிறது.
வரும் ஏப்ரல் 13 அன்று நடைபெறவிருக்கும் 14வது தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நமது இயக்கத்தையும், திராவிடர் சமுதாயத்தையும் பொறுத்தவரை வெறும் அரசியல்ரீதியான ஒரு ஜனநாயக நிகழ்வு மட்டுமல்ல; அதைவிட ஆழமாகவும் தொலைநோக்குடனும் பார்க்க வேண்டிய முக்கியமான சமுதாயப் போராட்டத்தின் வடிவமாகும்.
பரம்பரை யுத்தம்:
'பரம்பரை யுத்தம்' என்று சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே இதே எதிர்க்கட்சித் தலைவர் ஜெயலலிதா அம்மையார் அவர்கள் குறிப்பிட்டார். இப்போது நமது வாக்காளர்கள் முன் உள்ள பிரச்சனை, பல்வேறு ஒப்பனைகளுடன் வரும் மனுதர்மத்தை மீண்டும் ஆட்சியில் அமர்த்துவதா அல்லது பெரியார் அண்ணா கண்ட திராவிடர் இயக்க, சுயமரியாதை இயக்க இலக்கு நோக்கிய சமதர்ம ஆட்சியாக அனைவருக்கும் அனைத்தும் என்ற அடிப்படையில், ஐந்தாம் முறையாக பொற்கால ஆட்சியாக தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் கலைஞர் தலைமையிலான சூத்திர பஞ்சம, மனிதத் தர்ம ஆட்சியை மீண்டும் ஆட்சிப் பீடத்தில் அமர்த்த, நடைபெற்ற சரித்திர சாதனைகளைத் தொடரச் செய்வதா என்பதேயாகும்.
ஜாதி ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு இவற்றை உள்ளடக்கிய அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் என்ற சட்டத்தை இயற்றி, பெரியார் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிட முயற்சிகளைச் செய்தும், நீசபாஷை என்று இழிவுபடுத்தப்பட்ட நம் தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்து, தமிழ் மானம் காத்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தி, புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், தகுதி பெற்றுத் தந்து, தமிழ் மானம் காத்தும், தமிழ்ப் பண்பாட்டின் அடிப்படையில் தமிழ்ப் புத்தாண்டு தை முதல் நாளே என்று பிரகடனப்படுத்தி, புதியதோர் தமிழ் இன மறுமலர்ச்சியை ஏற்படுத்தியும், பண்பாட்டுப் பாதுகாப்புக்கு வழி செய்த துணிச்சல் மிகுந்த ஆட்சியாகும் மானமிகு கருணாநிதியின் ஆட்சி.
மக்கள் தொகையில் சரி பகுதியான மகளிர் நலம் காக்க, பெண்களுக்கான சுய உதவிக் குழுக்களை உருவாக்கிப் பெருக்கி, அவர்களுக்குச் சொந்த கால் பலத்தை ஏற்படுத்தி, சொத்துரிமை முதல் பதவி உரிமை வரை பலவற்றையும் தந்து, அவர்களுக்கு திருமண உதவி, மறுமண உதவி, கருவில் வளரும் குழந்தைகள் நலத்தையும்கூடப் பாதுகாத்தும், அனாதைகளான விதவைகளுக்கு உதவித் தொகை, திருநங்கையர்களாம் அரவாணிகளுக்குத் தனிவாரியம், மாற்றுத் திறனாளிகளுக்கு இடஒதுக்கீடு மற்றும் பல்வேறு வசதி இவைகளைச் செய்து வரலாறு படைத்துள்ள ஆட்சி என்ற சாதனைகளோடு தேர்தலை திமுக சந்திக்கிறது.
உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், படிக்கக் கல்வி, நோய் போக்க உதவியாக மருத்துவமனைகள், வேலை வாய்ப்புகள், கடனற்ற நிம்மதி இவை உள்ள வாழ்க்கையினைத் தருவதுதானே நல்லாட்சியின் அடையாளங்கள்?. அவை அத்தனையும் மக்களைச் சென்றடையும் வண்ணம் நாளும் திட்டம் தீட்டி செயல்படுத்திட்ட ஆட்சி திமுக ஆட்சிதானே!.
ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு, மலிவு விலையில் மளிகைப் பொருள்கள் 50 ரூபாய்க்கு; (காய்கறிகளும்கூட அவசியப்படும்போது அரசே மலிவு விலையில் உழவர் சந்தைகள் மூலம்) வழங்கிப் பசிப்பிணி போக்கியதோடு, நோயற்ற வாழ்வு வாழ வருமுன்னர் காக்கும் திட்டம் முதல், வந்தாலும் உடன் காக்கும் கலைஞர் உயிர் காக்கும் திட்டம் வரை, 108 எண் ஆம்புலன்ளி வண்டிகள் ஓடோடி வரும் மருத்துவ வசதிகள் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்திடும் திட்டங்கள் எல்லாம் இனிய கொடைகளாகும்.
கல்விப் புரட்சி:
கல்விப் புரட்சியோ, கிராமங்கள், நகரங்கள் போன்ற வேறுபாடு இன்றி, ஆரம்பப் பள்ளியில் தொடங்கி, தொழிற் கல்வி, பொறியியல், மருத்துவக் கல்லூரிகளை மாவட்டந்தோறும் அரசுத் துறையில் ஏற்படுத்திய வரலாறும், நுழைவு தேர்வினை ரத்து செய்தும் முதல் தலைமுறையினருக்கு சாதி, மத, பால் வேற்றுமை பாராது படித்து முன்னேற இலவசப் படிப்பு வசதிகள் எண்ணற்ற பல்கலைக் கழகங்கள் ஓட்டைக் குடிசைகளில் வாழ்ந்த மக்களுக்கு 21 லட்சம் குடிசைகள் இல்லா கான்கிரீட் வீடுகளை கலைஞர் வீடு கட்டும் திட்டத்தின்கீழ் அறிவித்து, 3 லட்ச வீடுகளில் ஏற்கெனவே எம்மக்கள் குடியேறி வாழ்கின்ற வாய்ப்புக்களை அளித்த ஆட்சி திமுக ஆட்சி.
சொன்னதையெல்லாம் செய்து சொல்லாததையும் செய்து, சாதனை மேல் சாதனைகள் அடுக்கியுள்ள ஆட்சி மக்கள் நலன் கருதித் தொடர வேண்டாமா? என்பதை வாக்காளர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும்.
ரூபாய் 7000 கோடி விவசாயிகள் கடன் தள்ளுபடி, பயிர்ப் பாதுகாப்பு, அசலை முறையாக செலுத்துபவர்களுக்கு கூட்டுறவுக் கடன் வட்டி தள்ளுபடி என்று அறிவித்து, ஏழைகள் நெஞ்சில் பால் வார்த்த ஆட்சி. பட்டினியின்றி, எலிக்கறியைத் தின்னாதவர்களாக ஆக்கி, வரலாறு படைத்த மனிதநேய ஆட்சி திமுக ஆட்சி, தொழிற்சாலை பெருக்கம், இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள்; வேலைகிட்டாதாருக்கு உதவித் தொகை இவ்வளவும் இங்கு சாதனைகள்.
1 லட்சத்து 70 ஆயிரம் ஊழியர்களை ஒரே கையெழுத்தில் வீட்டிற்கு அனுப்பி, நள்ளிரவில் சிறை பிடித்த ஆட்சியல்ல திமுக ஆட்சி.
ஆறாவது சம்பளக் கமிஷன் கூடுதல் ஊதியத்தையும் தந்து, அரசு ஊழியர்களை உயர்த்திட்ட ஆட்சி!. எந்தத்தரப்பிலும் போராட்டம் அரும்பும் போதே அழைத்துப் பேசி, தீர்வு காணும் ஜனநாயக நெறியில் நடைபோடும் ஆட்சியாகவே கடந்த 5 ஆண்டு காலம் சரித்திரம் படைத்துள்ளது!
தொழிலாளர் நல வாரியம் உட்பட எத்தனை எத்தனை வாரியங்கள்!
“எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமதர்மத் தத்துவ அடிப்படையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களும் நேரிடையாகவோ, மறைமுகமாகவோ திமுகவின் ஆட்சியால் பலன் அடைந்தவர்களேயாவார்கள் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள்:
ஆரிய ஊடகங்கள், ஏடுகளின் பழி தூற்றல்கள், பொய்யுரைப் பரப்பல்கள், நடக்காதவைகளை ஊழல் குற்றச்சாட்டுகளாக்கிக் காட்டுதல் இவைகளையும் மீறி, முகிலைக் கிழித்து வரும் முழு மதி போல கலைஞர் ஆட்சி மீண்டும் மலரப் போவது உறுதியாகும்!
இவ்வளவு சாதனைகளைச் செய்த ஓர் கட்சிக்கு, ஆட்சிக்கு எதிராக ஆரியம் வரிந்து கட்டி நிற்கிறது 1971ல் செய்ததைப் போல அவதூறுகளை அள்ளி வீசுகின்றது.
எனவே, திராவிடப் பெருங்குடி மக்கள், ஏமாந்து விடாமல் யார் வரக்கூடாது என்பதை முதலில் தெளிவாக உணர வேண்டும் யார் வர வேண்டும் என்பதற்குரிய காரணங்கள் எண்ணற்றவை என்ற போதிலும் கூட.
தந்தை பெரியார் அவர்கள் குறிப்பிடுவதுபோல, தன்மானத்தைப் பலி கொடுக்க வேண்டிய சந்தர்ப்பங்களும்கூட பொதுவாழ்வில் ஏற்படும். இனமான வேட்கையின்முன் தன்மானம் வெகுச் சாதாரணமானது என்பது அறிவுப் பூர்வமாக சிந்திப்பவர்களுக்குத் தெள்ளத் தெளிய விளங்கும்!.
ஒரு போரில் நமது வியூகம், நம் எதிரி வகுக்கும் வியூகம் உபாயத்தைப் பொறுத்தே அமையும். நாம் எந்த ஆயுதத்தை எப்படி எப்போது எடுப்பது என்பதை நம் எதிரிதான் தீர்மானிக்க வைக்கிறான் என்ற மூதுரை நமக்கு சரியான நிலைப்பாடு எடுக்க உதவுகிறது.
இந்த நிலையில், 1971 தேர்தலைப் போன்றதுதான் வரும் 14வது தமிழகச் சட்டப் பேரவைக்கான தேர்தலும். தமிழர்கள் திமுக தலைமையில் உள்ள கூட்டணியையே வெற்றி வாகை சூடச் செய்வதன் மூலம் மகத்தான திருப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்று இப்பொதுக்குழு தமிழினப் பெரு மக்களைக் கேட்டுக் கொள்கிறது.
வரும் தேர்தலில் திமுக, காங்கிரசு, பாமக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முசலிம் லீக் கட்சி, கொங்கு முன்னேற்றக் கழகம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி ஆகிய கட்சிகளை ஆதரித்து, வெற்றி பெறச் செய்யும் ஜனநாயகக் கடமையாற்றிட வாரீர் வாரீர் என்று திராவிடர் கழகப் பொதுக் குழு தமிழினப் பெரு மக்களுக்குக் கடமையுடன் கூடிய அன்பழைப்பை விடுக்கிறது. வெற்றி நமதே!.
ஈழ தமிழர்களுக்கு அரசியல் தீர்வு காண வேண்டும். தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளில் தமிழர்களை தூதர்களாக நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பொதுக்குழு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கி.வீரமணி, தமிழர்களின் நிலை உயரவும், சமதர்ம ஆட்சி தொடரவும் திமுக கூட்டணி வெற்றி பெறுவதற்கு பாடுபடுவோம். ஜெயலலிதாவின் ஆட்சி தமிழகத்தின் இருண்ட காலம். ஜெயலலிதாவின் இருண்ட கால ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதில் தமிழக மக்கள் உறுதியுடன் இருக்கிறார்கள்.
கடந்த காலத்தில் எப்படி நடந்தார்கள் என்பது, மிகப்பெரிய அளவிற்கு மக்களுக்கு தெளிவாக தெரியும். அதன் இருண்ட வரலாறு மீண்டும் திரும்ப கூடாது என்பது எங்களைப்போன்றவர்களுக்கு இருக்கின்ற கவலையாகும். எனவேதான் மனுதர்ம ஆட்சியை மீண்டும் அமைக்காமல், சமதர்ம ஆட்சியை கலைஞர் தலைமையில் அமைப்பதற்கு தமிழக மக்கள் ஆதரிக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்ய தயாராக இருக்கிறோம்.
தமிழ்நாட்டில் அனைத்து தரப்பு மக்களும் திமுக ஆட்சியில் பயன் அடைந்துள்ளனர். திமுக ஆட்சி தமிழகத்தில் தொடர வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications