அதிமுகவிலிருந்து மதிமுக வெளியேறி வர வேண்டும்-கார்த்திக்
அதிமுக கூட்டணியில் பேசுவோம், பேசுவோம் என்று கூறி காக்க வைத்து காக்க வைத்து கடுப்பேற்றியதால் வெறுப்பான, நடிகர் கார்த்திக் தலைமையிலான அகில இந்திய நாடாளும் கட்சி நேற்று பிற்பகல்வாக்கில்தான் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறியது.
இதைத் தொடர்ந்து வெளியேறப் போகும் கட்சியாக மதிமுக தற்போது பார்க்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பேசாமல் வெளியேறி வாருங்கள், நாம் இருவரும் இணைந்து கூட்டணி அமைப்போம் என்று நடிகர் கார்த்திக், வைகோவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுகுறித்து கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறுகையில், அகில இந்திய நாடாளும் கட்சியை எப்படியெல்லாம் அதிமுக அவமானப்படுத்தியதோ, அதே போல இப்போது மதிமுகவையும் அவமானப்படுத்தி வருகிறார்கள்.
மதிமுக சற்றும் யோசிக்காமல் கூட்டணியிலிருந்து வெளியேறி வந்து விட வேண்டும். அவர்கள் அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறி வந்தால் நாங்கள் அவர்களுடன் கூட்டணி அமைக்கத் தயார் என்று அழைப்பு விடுத்தார் கார்த்திக்.