ஆயிரம் விளக்கி்ல் ஸ்டாலின் செல்வாக்கை அறிய கருத்து கணிப்பு
சென்னை: ஆயரம் விளக்கு தொகுதியில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு எவ்வளவு செல்வாக்கு இருக்கிறது என்று அறிய அத்தொகுதி மக்களிடம் கருத்துக்கேட்பு நடத்தப்பட்டு வருகிறது.
வரும் சட்டசபை தேர்தலில் துணை முதல்வர் ஸ்டாலின் போட்டியிடும் தொகுதி இன்னும் முடிவாகவில்லை. இந்நிலையில் ஆயரம் விளக்கு தொகுதியில் நடத்தப்பட்டு வரும் கருத்துக்கேட்பின் அடிப்படையில் தான் அவர் போட்டியிடும் தொகுதி முடிவு செய்யப்படும் என்று திமுக தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது ஆயிரம் விளக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருப்பவர் மு.க. ஸ்டாலின். அவர் கடந்த 1984-ம் ஆண்டில் முதன்முறையாக இதே தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
அதன் பின்னர் நடந்த தேர்தல்களில் 1991-ம் ஆண்டு தவிர மற்ற அனைத்து தேர்தல்களிலும் ஆயிரம் விளக்கு தொகுதியில் தொடர்ந்து வெற்றி வாகை சூடியுள்ளார்.
இந்நிலையில் வரும் தேர்தலில் ஸ்டாலின் ஆயரம் விளக்கு தொகுதியில் போட்டியிடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது
ஆயரம் விளக்கு தொகுதியில் அரசு ஊழியர்கள், படித்தவர்கள், பணவசதி படைத்தவர்கள் அதிகம் உள்ளனர். அவர்களுக்கு நிச்சயமாக 2ஜி ஊழல் குறித்து நன்றாகத் தெரிந்திருக்கும் என்பதால் தான் இந்த கருத்துக்கேட்பு.
கருத்துகேட்பு பணிகள் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்த பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் வீடு, வீடாகச் சென்று அங்குள்ளவர்கள் யாருக்கு, எதற்காக வாக்களிக்கப் போகிறார்கள் என்று கேட்டு குறிப்பெடுத்து வருகின்றனர்.
இதற்கென தயாரிக்கப்பட்டுள்ள கேள்விப் பட்டியலில் மாநில, மத்திய அரசுகளின் தற்போதைய நிலைமை திருப்திகரமாக இருக்கிறதா, இந்த ஆட்சிகாலத்தில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளதா, எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள், என்ன காரணம் என்ற கேள்விகள் இடம்பெற்றுள்ளன.
எதிர்கட்சியை ஆதரிப்போம் என்று யாராவது கூறினால் அவர்களிடம் ஏன், எதற்கு என்று துருவித் துருவி கேள்விகள் கேட்கப்படுகின்றன. ஆளுங்கட்சியின் மேலான இந்த அதிருப்திக்கு மாநிலத்தில் ஏற்பட்டுள்ள விலைவாசி உயர்வு காரணமா? 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பிரச்னையா, அடிப்படை வசதி குறைபாடா உள்ளிட்ட கேள்விகள் விரிவாக கேட்கப்படுகின்றன.
இதில் சேகரிக்கப்படும் விவரங்கள் முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications