கடந்த முறை வென்றதில் சிபிஎம்முக்கு 4, சிபிஐக்கு 3 கிடைக்கவில்லை!
சென்னை: கடந்த முறை வென்ற தொகுதிகளில் சிபிம் கட்சிக்கு 4 தொகுதிகளும், சிபிஐக்கு 3 தொகுதிகளும் இந்தமுறை கிடைக்கவில்லை.
இடதுசாரி கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீட்டை முடித்துள்ளார் ஜெயலலிதா. இதில் அவர்கள் எதிர்பார்த்த, கேட்ட தொகுதிகள் சிலவற்றை ஒதுக்கியுள்ளார். சிலவற்றுக்குப் பதில் வேறு தொகுதிகளை கொடுத்துள்ளார்.
சிபிஐக்கு 5 தனித் தொகுதிகள்:
சிபிஐ கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பத்து தொகுதிகளில் ஐந்து தனித் தொகுதிகளாகும். அதிலும் பென்னாகரம் தொகுதியையும் ஜெயலலிதா சிபிஐக்கு ஒதுக்கிக் கொடுத்துள்ளார். இங்கு அதிமுக இடைத்தேர்தலில் 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு டெபாசிட்டைப் பறிகொடுத்தது என்பது நினைவிருக்கலாம். கட்டாயம் தோல்வி என்று தெரிந்தே இந்தத் தொகுதியை வாங்கும் நிலைக்கு சிபிஐ தள்ளப்பட்டுள்ளது.
மேலும் தற்போது உறுப்பினர்களாக உள்ள 6 தொகுதிகளில் 3 மட்டுமே சிபிஐக்கு மீண்டும் கிடைத்துள்ளது. அவை - சிவகங்கை, திருத்துறைப்பூண்டி, ஸ்ரீவில்லிபுத்தூர். மன்னார்குடி, நன்னிலம், ஆலங்குடி கிடைக்கவில்லை.
சிபிஎம்முக்கு 4 தொகுதிகள் கிடைக்கவில்லை:
கடந்த சட்டசபைத் தேர்தலில் சிபிஎம் கட்சி வென்ற தொகுதிகளில் நான்கு தொகுதிகள் தற்போது அவர்களுக்குத் திரும்பக் கிடைக்கவில்லை.
கடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 9 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதில் குடியாத்தம், மதுரை கிழக்கு, நாகப்பட்டனம், திருவட்டார் ஆகிய தொகுதிகள் இந்தமுறை கிடைக்கவில்லை. இதில் திருவட்டார் தொகுதி இந்த முறை தொகுதி மறு சீரமைப்பின் கீழ் நீக்கப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.
கடந்த முறை வென்ற தொகுதிகளில் திண்டுக்ல், அரூர், பெரம்பூர், திருப்பூர், விளவங்கோடு ஆகிய தொகுதிகளை மீண்டும் பெற்றுள்ளது சிபிஎம்.
இவை தவிர புதிதாக கிடைத்துள்ளவை - கீழ்வேளூர், மதுரை தெற்கு, பெரியகுளம், மதுரவாயல், சிதம்பரம், பாளையங்கோட்டை, விக்கிரவாண்டி ஆகியவை.












Click it and Unblock the Notifications